
தேசியக்கொடிக்கு ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செய்யும் படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “லூசு பப்பு இது இந்தியா. உன் தாய்நாடு இத்தாலி இல்லை. தேசியகொடிக்கு வலது கைய்யால தான் சல்யூட் அடிக்கணும்னு தெரியாத ஒரு முட்டாள்தான் காங் பிரதமர் வேட்பாளர்! இது தான் உன் தேசபக்தியா??? முட்டாளே!” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Hari Priya என்பவர் 2020 ஜனவரி 11ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
புகைப்படத்தை மிரர் அல்லது ஃபிளிப் செய்து பதிவிட்டு விஷமத்தனமான கருத்தைப் பதிவு செய்வது சமூக ஊடகங்களில் அவ்வப்போது நடைபெறுகிறது. அதாவது ஒரு புகைப்படத்தை எடுத்து, போட்டோஷாப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வலமிருந்து இடமாக மாற்றுவது சாதாரணமான விஷயம். நாம் செல்ஃபி எடுக்கும்போது புகைப்படம் எல்லாம் இப்படி ஃபிளிப்பாகத்தான் விழும். இதை போட்டோஷாப் உள்ளிட்ட மென்பொருளை பயன்படுத்தி சரி செய்துகொள்ளலாம். இந்த சின்ன டிரிக்ஸை வைத்து சோஷியல் மீடியாவில் அதிர்ச்சியான தகவலை பரப்பி வருவது வேதனையை அளிக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் கையில் கட்டுப் போட்டிருந்ததை வலது, இடது என்று மாற்றி போட்டிருந்தனர். அதேபோல், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் கையில் ஏற்பட்ட காயத்தையும் வலது இடது என்று ஃபிளிப் படங்களை வெளியிட்டு விஷமத்தனமான கருத்தைப் பரப்பியிருந்தனர்.
ராகுல் காந்தியின் சட்டை பாக்கெட் வலது பக்கத்தில் இருப்பதுபோல உள்ளது. இந்த புகைப்படமும் பார்க்க ஃபிளிப் செய்யப்பட்ட புகைப்படம் போலவே தெரிந்தது. எனவே, அசல் படத்தைக் கண்டறிய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் சமூக ஊடகங்களில் பல மொழிகளைச் சேர்ந்தவர்களால் வைரலாக பகிரப்பட்டு வருவதும் இது பற்றிய உண்மை கண்டறியும் ஆய்வுகள் பல நடந்ததும் தெரியவந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு, உண்மை படம் கிடைக்கிறதா என்று தேடினோம்.

Search Link 1 | Search Link 2 |
yandex.com ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அசல் புகைப்படம் கிடைத்தது. இந்தியா டி.வி வெளியிட்டிருந்த செய்தியில், 2011ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் ராகுல் காந்தி தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த புகைப்படத்தை ஏ.பி செய்தி ஊடகம் எடுத்ததாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், பல ஊடகங்கள் இந்த புகைப்படத்தை வெளியிட்டதற்கான ஆதாரம் கிடைத்தது.

indiatvnews.com | Archived Link 1 |
zeenews.india.com | Archived Link 2 |
ndtv.com | Archived Link 3 |
மேலும் வீடியோ ஆதாரம் ஏதும் கிடைக்கிறதா என்று தேடினோம். அப்போது ராகுல் காந்தி நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ கிடைத்தது. ஆனால், அவர் மரியாதை செலுத்தும் காட்சிகள் அதில் இடம் பெறவில்லை. ஆனால், ராகுல் காந்திக்கு பின்னால் இடது புறம் குடை பிடித்தபடி உள்ள நபர் மற்றும் கண்ணாடி அணிந்த நபர் வீடியோவில் வலது புறம் உள்ளனர். இதன் மூலம், புகைப்படத்தை மிரர் அல்லது ஃபிளிப் செய்திருப்பது உறுதியானது. ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செலுத்துகிறார் முட்டாள் என்று மிகக் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளனர்… ஃபிளிப் செய்த படத்தை வெளியிட்டுவிட்டு ராகுல் காந்தியை திட்டித் தீர்க்கும் இவர்களை என்ன என்று சொல்வது?
Archived Link |
நம்முடைய ஆய்வில்,
2011ம் ஆண்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஏ.பி செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் ராகுல் காந்தி வலது கையால் மரியாதை செலுத்துவது தெளிவாகியுள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ராகுல் காந்திக்கு இடதுபுறம் உள்ள நபர்கள், 2011ல் எடுக்கப்பட்ட வீடியோவில் ராகுல் காந்தியின் வலது பக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தேசிய கொடிக்கு ராகுல் காந்தி இடது கையால் மரியாதை செலுத்தினார் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், ராகுல் காந்தியின் படம் ஃபிளிப் செய்து வைக்கப்பட்டுள்ளது என்பதால் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் புகைப்படம் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இடது கையால் மரியாதை செலுத்திய ராகுல்?- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False
