
திருப்பூர் – காங்கேயம், திருவண்ணாமலை – திண்டிவனம் சாலை என்று ஒரு அழகான சாலையின் புகைப்படத்தைப் பலரும் பல ஊர்களில் பெயரை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Facebook I instagram.com I Archive
ரவுண்டானா மற்றும் நெடுஞ்சாலையின் அழகிய புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திருப்பூர் டூ காங்கேயம் சாலை.. நல்லூர் ரவுண்டானா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே படத்தை இன்னொருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு நிலைத் தகவலில், “திருவண்ணாமலை To திண்டிவனம் Road” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் மற்றொருவர் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “தென்காசி to மதுரை சாலை.. புளியங்குடி சந்திப்பு…” என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி பலரும் இந்த புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வெளிநாட்டுப் புகைப்படங்களை எடுத்து அது நம் ஊரில் எடுத்தது என்று லைக்ஸ்க்காக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தின் அமெரிக்காவின் மான்ஹாட்டன் புகைப்படத்தைச் சென்னை துறைமுகம் என்று பதிவிட்டிருந்தனர். தற்போது அதே போன்று திருப்பூரிலிருந்து காங்கேயம் செல்லும் வழியில் நல்லூர் ரவுண்டானா என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து வருகின்றனர். இதுவும் ஏராளமான லைக்ஸ், ஷேர் பெற்றுள்ளது.
இந்த புகைப்படம் தமிழ்நாட்டைச் சார்ந்தது இல்லை என்பது தெரியும்… ஆனால் எந்த ஊரைச் சார்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது போர்ச்சுக்கல் நாட்டின் தீவு நகரான மதீராவில் உள்ள மச்சிகோ (Machico, Madeira) என்ற இடத்தில் உள்ள சாலை என்று சில பதிவுகள் நமக்குக் கிடைத்தன. ஆனால், உறுதியான ஆதாரம் கிடைக்கவில்லை.
உண்மைப் பதிவைக் காண: madeira-restaurants.com I Archive
எனவே, கூகுளில் Machico, Madeira என்று சில அடிப்படை வார்த்தைகளை டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் உள்ள இடத்தின் வேறு சில புகைப்படங்களைச் சிலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது, shutterstock.com என்ற புகைப்படம் விற்பனை செய்யும் இணையதளத்தில் கூட இந்த இடத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்ததைக் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: Google Map
அந்த இடத்தின் கூகுள் மேப், ஸ்ட்ரீட் மேப் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அந்த தீவின் பல இடங்களில் ரவுண்டானா இருந்தது என்பதால் அதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்களோ அது மச்சிகோவில் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. எனவே, கூகுள் மேப்பில் அந்த ஊரின் எல்லா ரவுண்டானாக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தோம்.
உண்மைப் பதிவைக் காண: shutterstock.com I Archive
தொடர்ந்து தேடிய போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் துல்லியமாக ஒத்துப்போகும் இடம் கிடைத்தது. ஒன்றுக்கு பல முறை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் கூகுள் மேப்பில் நாம் கண்டறிந்த இடத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு அதை உறுதியும் செய்தோம். இதன் மூலம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்று பரவும் ரவுண்டானாவின் புகைப்படம் போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்தது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
போர்ச்சுக்கல்லின் மதீரா தீவில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் புகைப்படத்தை திருப்பூர், திருவண்ணாமலை, தென்காசி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:திருப்பூர் – காங்கேயம் சாலை ரவுண்டானா என்று பகிரப்படும் புகைப்படம் உண்மையா?
Written By: Chendur PandianResult: Misleading
