
திராவிட ஆட்சியில் புகையிலைப் பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரியை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தார்கள் என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் டிவி வெளியிட்ட செய்தியை அப்படியே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “சந்தி சிரிக்குது #திராவிடமாடல் #திமுக. ஆட்சியை …
புகையிலை பொருட்களை பதுக்கியவரிடம் லஞ்சம் .. காவல்துறை துணை உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது… சீருடையுடன் சாலையில் அழைத்துச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
லஞ்சம் வாங்கிய திராவிட மாடல் போலீஸ் என்று குறிப்பிட்டு இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும்போது திருநள்ளாறு காவல் நிலையம் என்று வருகிறது. திருநள்ளாறு என்பது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ளது. எனவே, புதுச்சேரி செய்தியை தமிழ்நாட்டில் நடந்தது போன்று பதிவிட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள வீடியோவை பார்த்தோம். அதில், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய பக்கிரிசாமி என்பவர் புகையிலைப் பொருட்களை பதுக்கியதாகக் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டனிடம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதையடுத்து மணிகண்டன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி சிறப்பு உதவி ஆய்வாளரிடம் லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
செய்தியின் எந்த இடத்திலும் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது என்றோ, கைது செய்யப்பட்ட காவலர் தமிழ்நாடு காவல் துறை சேர்ந்தவர் என்றோ குறிப்பிடப்படவில்லை. செய்தியை வெளியிட்ட பாலிமர் டிவி-யின் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தோம். அதில், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பதை செய்தியின் உள்ளே குறிப்பிட்டிருந்தார்களே தவிர, சமூக ஊடக பதிவிலோ, வீடியோவின் மீதோ புதுச்சேரி என்றோ, காரைக்கால் என்றோ அல்லது திருநள்ளாறு என்றோ கூட குறிப்பிடப்படவில்லை. வதந்தியைப் பரப்புகிறவர்கள் இது சாதகமாக அமைந்துவிட்டது. செய்தியை முழுமையாகப் பார்த்திருந்தால் கூட இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கவில்லை என்பது தெளிவாகியிருக்கும்.
புதுச்சேரியில் தி.மு.க ஆட்சியில் இல்லை. அங்கு என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எனவே, தி.மு.க ஆட்சியில் லஞ்சம் வாங்கிய போலீசை சிபிஐ கைது செய்தது என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க ஆட்சியில் லஞ்சம் வாங்கிய காவலரை கைது செய்த சி.பி.ஐ என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:லஞ்சம் வாங்கிய போலீசை கைது செய்த சிபிஐ என்று பரவும் செய்தி தமிழ்நாட்டில் நடந்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
