FACT CHECK: தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் உண்டு என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.வி.சேகருடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இருக்கும் புகைப்படத்துடன் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது போன்று ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. எஸ். வி. சேகரை சந்தித்துவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடி பேட்டி” என்று உள்ளது.

இந்த பதிவை Facebook DMK Youth Wing என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Seyed Ismail என்பவர் 2021 ஜனவரி 11 அன்று பகிர்ந்துள்ளார். ஏராளமானோர் இதே ஸ்கிரீன்ஷாட்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக பேட்டி அளிக்கக் கூடியவர். பா.ஜ.க ஆதரவாக பல பேட்டி அளித்துள்ளார். குஜராத் மோடியா இந்த லேடியா என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி எங்கள் டாடி என்று கூறி அனைவரையும் அதிர வைத்தவர் ராஜேந்திர பாலாஜி. எனவே, இந்த தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது அவர் கூறியிருக்கலாம் என்று நம்பி பலரும் ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.

உண்மையில் இதை ராஜேந்திர பாலாஜி கூறினாரா என்று அறிந்துகொள்ள நியூஸ் 7 தமிழ் இணையதள பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் எஸ்.வி.சேகருடன் ராஜேந்திர பாலாஜி சந்தித்தாரா, எப்போது சந்தித்தார், அப்போது பேட்டி எதுவும் அளித்தாரா என்று தெரிந்துகொள்ள கூகுளில் தேடினோம்.

நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. படம் உண்மையானது என்பதால் எஸ்.வி.சேகர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரது சமூக ஊடக பக்கங்களில் எதாவது தகவல் உள்ளதா என்று பார்த்தோம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் வெளியிட்ட ட்வீட் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ஆக்டிவாக பதிவிடுவது இல்லை என்பது தெரிந்தது.

 ஆனால், எஸ்.வி.சேகர் இந்த படத்தை 2021 ஜனவரி 9ம் தேதி வெளியிட்டிருந்தார். “எதிர்பாராத விதமாக மாண்புமிகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் சந்திப்பு” என்று குறிப்பிட்டிருந்தார். 

Archived Link

ஜனவரி 9, 2021-க்குப் எஸ்.வி.சேகரை சந்தித்த பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி எதையும் அளித்ததாக நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். 

அப்போது அவர், “இது நாங்கள் வெளியிட்ட செய்தி இல்லை. போலியானது” என்றார். இதன் மூலம், தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக பரவி வரும் நியூஸ் 7 தமிழ் செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் உள்ளது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாக பகிரப்படும் நியூஸ் 7 தமிழ் செய்தி போலியானது என்று தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழகத்தை ஆளும் தகுதி பிராமணர்களுக்கு அதிகம் உண்டு என்று ராஜேந்திர பாலாஜி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False