கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

Health அரசியல் சார்ந்தவை | Political

முருக மாநாட்டைத் தடுக்கும் விதமாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

சத்தியம் டிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்று இருந்தது. 

நிலைத் தகவலில், “திமுகவுக்கு_பயம்_வந்துவிட்டது முருக பக்தர்கள் மாநாடு- 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என திட்டமிடப்பட்டு, 10 லட்சம் என முடிவாகி- கடைசியில் 15 லட்சத்தையும் தாண்டி கூடுவார்கள் என உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கையினை பார்த்து மிரண்டது இந்து விரோத பித்துக்குளி கோமாளிகளின் அரசு.

இந்துக்களின் எழுச்சி ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்திவிடும் எனப்பயந்து மிரண்டு தடை போடப் பார்த்தார்கள். நீதிமன்றம் – செவுள் அறை அறைந்து அனுமதி அளித்தது. கடைசியில் கிறுக்கு மூதேவிகள் திருமுருக பக்தர்கள் மாநாட்டை தடுக்கும் நோக்கிலேயே இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதையும் தகர்ப்போம். எதையும் வெல்வோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரையில் ஜூன் 22ம் தேதி முருக மாநாட்டை இந்து முன்னணி நடத்துகிறது. இதை வைத்து ஒரு பக்கம் அரசியல் நடக்கிறது. மாநாட்டைத் தடுக்க தி.மு.க அரசு கொரோனாவை காரணம் காட்டி முழு ஊரடங்கை அறிவித்துள்ளது என்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்த நியூஸ் கார்டை பார்க்க உண்மையானது போல உள்ளது. இருப்பினும் புதிது போல இல்லை. மேலும், தமிழ்நாடு அரசு அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தால் மிகப்பெரிய செய்தியாக வந்திருக்கும். ஆனால், சிறு தகவல் கூட இல்லை. எனவே, பழைய செய்தியை எடுத்து புதிது போல பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

புகைப்படத்தில் உள்ள தகவலை அப்படியே கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது 2022 ஜனவரி 5ம் தேதி சத்தியம் டிவி வெளியிட்டிருந்த செய்தி யூடியூபில் நமக்குக் கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருந்த ஸ்கிரீன்ஷாட் காட்சி 100 சதவிகிதம் ஒன்றாக இருந்ததைக் கண்டோம். இந்த வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவானது.

Archive

தொடர்ந்து தேடிய போது தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழுவும் இந்த ஸ்கிரீன்ஷாட் தவறானது என்று குறிப்பிட்டு பதிவு வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அறிவித்த தமிழ்நாடு அரசு என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

2022ல் வெளியான செய்தியை எடுத்து முருக மாநாட்டைத் தடுக்க கொரோனாவை காரணம் காட்டி ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

Written By: Chendur Pandian  

Result: False

Leave a Reply