கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தினமலர் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "கனடா நாட்டின் வளர்ச்சி என்பது இந்தியர்களின் உழைப்பை நம்பியே இருக்கிறது. நடிகர் அக்‌ஷய் குமாரை முன்னுதாரணமாக கொண்டு பாரத திருநாட்டின் மீது பற்று கொண்ட கனடா வாழ் இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் - இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை Nila Bharathi என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 20ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

உண்மை அறிவோம்:

இந்தியா - கனடா இடையே உறவு சுமுகமாக இல்லாத சூழலில், இந்தியர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இப்படி அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதாலும், இந்த நியூஸ் கார்டு வழக்கமாக தினமலர் வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை என்பதாலும் இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஏதேனும் அறிவிப்பை இந்தியா வெளியிட்டிருந்தால் அது இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தியிருக்கும். செய்தி ஊடகங்களில் மிகப்பெரிய விவாதமே நடந்திருக்கும். ஆனால், துண்டு செய்தியாகக் கூட இப்படி ஒரு செய்தி வெளியாகவில்லை. இதுவே இந்த செய்தி போலியானது என்பதை உறுதி செய்கிறது.

அடுத்ததாக இப்படி ஒரு நியூஸ் கார்டை தினமலர் வெளியிட்டதா அன்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் செப்டம்பர் 19, 2023 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த தேதியில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் வெளியாகவில்லை.

உண்மைப் பதிவைக் காண: dinamalar.com I Archive

எனவே, இந்த நியூஸ் கார்டை தினமலர் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி ஒருவருக்கு வாட்ஸ்அப்-ல் அனுப்பினோம். அதைப் பார்த்த அவர், "இந்த நியூஸ் கார்டு போலியானது. இதை தினமலர் வெளியிடவில்லை" என்று உறுதி செய்தார். மேலும் இது போலி செய்து என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பதாக தெரிவித்த அவர், அந்த செய்திக்கான இணைப்பையும் வழங்கினார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘கனடா வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும்,’ என்று ஜெய்சங்கர் கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False