
வன்னியர் சங்கத்தின் ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தி.மு.க எம்.பி செந்தில்குமார் சுருட்டினார் என்று ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Facebook 2 I Archive 2
திமுக எம்.பி செந்தில் குமார் படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் அட்டைப் படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “திமுக எம்பி சாதனை.. தர்மபுரி வன்னியர் சங்கத்தின் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சுருட்டல். திமுக எம்.பி செந்தில்குமார் குடும்பம் அபேஸ்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
நிலைத் தகவலில், “கட்சி கொள்கையை காப்பாற்றிய தி மு க MP” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Seenivasan Gopalapuram என்பவர் 2020 ஜூலை 27 அன்று பகிர்ந்துள்ளார். Sivaraman Sivasankaran என்பவர் 2021 மே 5 அன்று பதிவிட்டிருந்தார். இவர்களைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமூக ஊடகங்களில், திமு.க-வினர் பற்றி அவதூறாக பேசி வருபவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யும் நடவடிக்கையில் தி.மு.க எம்.பி செந்தில்குமார் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், வன்னியர் சங்கத்தின் ரூ.30 கோடி சொத்துக்களை அவர் அபகரித்துவிட்டதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டது போன்று பலரும் பதிவிட்டு வரவே இதுபற்றி ஆய்வு செய்தோம்.
முதலில், ஜூனியர் விகடனில் இப்படி செய்தி எதுவும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். விகடன் இணையதளத்தில் தேடிய போது நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. மேலும், ஓராண்டாக இந்த அட்டைப் படம் பகிரப்பட்டு வரும் நிலையில் விகடன் ஆர்கிவ் தளத்துக்குச் சென்று ஜூனியர் விகடன் அட்டைப் படங்களை ஆய்வு செய்தோம். 2020ம் ஆண்டு ஜூன், ஜூலை அல்லது அதற்கு முன்பாக இப்படி ஒரு அட்டைப் படத்தை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை என்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive
விகடன் ஆசிரியர் குழுவைத் தொடர்புகொண்டு கேட்ட போது ‘’இது போலியானது, இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளோம்,’’ என்று கூறி அதன் லிங்கை நமக்கு அளித்தனர். அந்த ட்வீட்டில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அட்டைப் படத்தின் மீது “FAKE” முத்திரை குத்தப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “ஜூனியர் விகடனில் இடம்பெற்றது போல சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த அட்டைப்படம் போலியானது. ஜூனியர் விகடன் பெயரிட்டு இதைப் போலியாகப் பரப்பியவர்கள் மீது சட்டப்படி காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த ட்வீட் பதிவுக்கு தி.மு.க எம்.பி செந்தில்குமார் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. உண்மையைத் தெளிவுபடுத்தியதற்கு நன்றி என்று அவர் கூறியிருந்தார்.
இதன் மூலம் வன்னியர் சொத்துக்களை தி.மு.க எம்.பி செந்தில்குமார் அபகரித்தார் என்று பரவும் ஜூனியர் விகடன் போஸ்டர் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
திமுக எம்.பி ரூ.30 கோடி முறைகேடு செய்தார் என்று ஜூனியர் விகடனில் செய்தி வெளியானதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ஜூனியர் விகடன் பெயரில் தி.மு.க எம்.பி பற்றி பரவும் போலி போஸ்டர்!
Fact Check By: Chendur PandianResult: False
