
‘’கோவையில் ஒரே நேரத்தில் இருவர் பயன்படுத்தும் வகையில் நிறுவப்பட்டுள்ள டாய்லெட்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) அனுப்பி, உண்மையா என்று கேட்டிருந்தார்.

இந்த மீம் பதிவை நியூஸ் 7 தமிழ் ஊடகம் முதலில் நகைச்சுவை நோக்கில் பகிர்ந்திருக்க, அதனை எடுத்து மற்ற சமூக வலைதள பயனாளர்கள் ‘இது திராவிட ஆட்சியில் (திமுக) கட்டப்பட்ட கழிப்பறை,’ என கூடுதல் தகவல் சேர்த்து, சமூக வலைதளங்களில் பகிர்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link
உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படம் பற்றி விவரம் அறிய நாம் கோவை மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டோம். அங்குள்ள பிஆர்ஓ., அலுவலகம் சார்பாக, இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஷர்மிளா அவர்களிடம் விளக்கம் கேட்டு, நமக்கு பதில் அளித்தனர்.
இதன்படி, ‘’குறிப்பிட்ட கழிப்பறை கோவை மாநகராட்சி வார்டு எண் 66, அம்மன் குளம் பகுதியில் 1995ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். சிறுவர்களின் பயன்பாட்டிற்காக இது நிறுவப்பட்டது. பெரியவர்களின் கண்காணிப்பில் சிறுவர்கள் கழிப்பறையை பயன்படுத்தவும், கதவு தாழ்ப்பாள் போட தெரியாமல் சிறுவர்கள் உள்ளே சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் இப்படி ஒரே அறையில் இரட்டை டாய்லெட் நிறுவப்பட்டது. காலப் போக்கில் பொதுமக்களும் இதனை பயன்படுத்த தொடங்கினாலும், இடையே தடுப்புக் கதவு இல்லாததால், பரவலாக உபயோகிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இது மட்டுமின்றி இதேபோல பயன்பாட்டில் இல்லாத ஏராளமான கழிப்பறைகளை புதுப்பித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி வருகிறோம். சர்ச்சைக்குரிய கழிப்பறையை புதுப்பித்து, அங்கே பெரியவர்கள் சிறுநீர் கழிக்கும் வகையில் புதிய பீங்கான் நிறுவியுள்ளோம்,’’ என்று தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, கோவை மாநகராட்சி பத்திரிகைச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதனை கீழே இணைத்துள்ளோம்.

குறிப்பிட்ட கழிப்பறையின் புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்தையும் கீழே இணைத்துள்ளோம்.

குழந்தைகள் பயன்பாட்டிற்கு, இதுபோல இரட்டை கழிப்பறைகள் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் கூட நிறுவப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் மன தைரியத்தை மேம்படுத்தும் வகையில் இப்படியான கழிப்பறை நிறுவப்பட்டதாக, உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் விளக்கம் கூட அளித்திருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனவே, 1995ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் குழந்தைகள் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்ட கழிப்பறையை தற்போதைய திமுக ஆட்சி புதுப்பித்து, பெரியவர்கள் பயன்படுத்த திறந்துள்ளது. ஆனால், இந்த உண்மை விவரம் தெரியாமல், திமுக ஆட்சியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் கதவின்றி இரட்டை கழிப்பறையை கட்டி, ஊழல் செய்துள்ளதாகச் சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பகிர்வதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கோவையில் 1995-ல் நிறுவப்பட்ட கதவில்லா டாய்லெட் புகைப்படம் தற்போது பரவுவதால் சர்ச்சை…
Fact Check By: Fact Crescendo TeamResult: Partly False
