சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் சீமான் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீமான் மூங்கில் படகில் செல்வது போன்ற புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "நெய்தல் படையுடன் சென்னையில் அதிபர் " என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவானது 2023 டிசம்பர் 4ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க களமிறங்கிய சீமான் என்று நையாண்டிக்காகவும் சிலர் உண்மை எனக் கருதியும் இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், சென்னை மழை வெள்ள சூழலில் இந்த புகைப்படம் பதிவிட்டிருப்பதன் மூலம் தற்போது நடந்தது போன்ற தோற்றத்தை இந்த பதிவு உருவாக்குகிறது. எனவே, இந்த புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். நமக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை. எனவே, சீமான், மழை வெள்ளம், மூங்கில் படகு என்று இந்த புகைப்படத்துடன் தொடர்புடைய சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது 2015ம் ஆண்டு இதே போன்ற படத்துடன் ஊடகம் ஒன்று வெளியிட்ட பதிவு நமக்கு கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: oneindia.com I Archive 1 I eelamview.com I Archive 2

அதில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் போது சென்னை வளசரவாக்கம் பகுதியில் சீமான் மீட்புப் பணியில் ஈடுபட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தேடிய போது இது தொடர்பான மேலும் சில ஊடக பதிவுகள் கிடைத்தன.

சீமான் மீட்புப் பணியில் ஈடுபட்டது தொடர்பாக அவரது கட்சியின் யூடியூப் பக்கத்தில் வீடியோ உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது 2015ம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பின் போது வளசரவாக்கம், சின்ன போரூர் பகுதியில் அவர் நிவாரணப் பணியில் ஈடுபட்டார் என்று சில வீடியோக்கள் கிடைத்தன. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ளது போன்று மூங்கில் படகில் சென்று அவர் நிவாரணப் பணி மேற்கொண்ட காட்சிகளைக் காண முடிந்தது.

இதன் மூலம் 2015ம் ஆண்டு மழை வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட படத்தை எடுத்து, விவரங்களைக் குறிப்பிடாமல் 2023 சென்னை மழை வெள்ள பாதிப்பு சூழலில் பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போதுமான தகவல் இன்றுி வெளியிடப்பட்ட பதிவு இது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகில் வந்து உதவிய சீமான் என்று பரவும் புகைப்படம் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மீட்பு பணியில் சீமான் என்று பரவும் புகைப்படம் 2023ம் ஆண்டு எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: Missing Context