RAPID FACT CHECK: எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் பழைய படம்!

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ கைப்பற்றிய ஆயுதங்கள் என்று சில பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

மேசை முழுக்க வாள்களை போலீசார் அடுக்கிவைத்துப் பார்வையிடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருக்காக, யாரிடமிருந்துன்னு நெனச்சீங்க மக்களே? நேற்று NIA வால் கைது செய்யப்பட்ட SDPI-யினரிடமிருந்தாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை மதுரை தல்லாகுளம் பிரகாஷ் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ (Social Democratic Party of India – SDPI) பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளுக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றன. இந்த புகைப்படங்கள் நாம் ஏற்கனவே ஆய்வு செய்த பதிவில் இடம் பெற்றது போல இருந்ததால் அதைப் பற்றி ஆய்வு செய்தோம்.

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதம் என்று இந்த படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. மேலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது என்று இதே படத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதும் தெரிந்தது.

Archive

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது, இது 2016ம் ஆண்டு குஜராத்தில் ஒரு தங்கும் விடுதிக்கு அருகே உள்ள கடையில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் செய்திகள் கிடைத்தன. இவர்கள் சட்ட விரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 257 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று 2016ல் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: gujaratheadline.com I Archiv 1 I timesofindia I Archiv 2

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தில் உள்ள காவலர்கள், மேசை, சுவற்றில் இருக்கும் நாட்காட்டி என அனைத்தும் gujaratheadline.com என்ற இணையதளம் இருந்த படத்துடன் ஒத்துப்போவதை காண முடிந்தது. 

2016ம் ஆண்டு குஜராத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, 2022ல் எஸ்டிபிஐ கட்சியினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று தவறான தகவல் சேர்த்து விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

எஸ்டிபிஐ கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் நடந்த என்ஐஏ சோதனையில் சிக்கிய ஆயுதங்கள் என்று பரவும் படம் 2016ம் ஆண்டு குஜராத்தில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:RAPID FACT CHECK: எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் பழைய படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: False