
விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து தனி நாடு கேட்டு சீக்கியர்கள் போராடுவதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சீக்கியர்கள் “காலிஸ்தான் ஜிந்தபாத்” என்று கோஷம் எழுப்பியபடி செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “விவஸாயிகளை போராட தூண்டிய காங்கிரஸ் கட்சிக்கு பிரமாதமாக பாடம் புகட்டி வரும் பஞ்சாப் பிரிவினைவாதிகளின் ‘தனி ராடு‘ கோஷம்.. காலிஸ்தான் … ஜிந்தாபாத்…… “இப்ப.. எப்டியாவது இவனுங்கள ஒடுக்கி குடுங்க எசமான்..” என பஞ்சாப் முதல்வர் மத்ய அரசிடம் கெஞ்ச துவங்கி உள்ளாராம்…எதையும் ‘விதைக்கும்‘ முன் யோஸிக்க வேண்டும்.. அதையும் விவஸாயிகள் போர்வையிலேயே விதைச்சதால வில்லங்கம் மரம் ஆகி வருகிறது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Rajagopalan Ramakrishnan என்பவர் உலகின் குரு பாரதம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 டிசம்பர் 15ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாய சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தனி நாடு கோஷத்தை சீக்கியர்கள் எழுப்புவதாக தொடர்ந்து தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்களை, புகைப்படங்களை எல்லாம் எடுத்து தற்போது நடந்தது போல சிலர் பதிவிட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி தூண்டிவிட்டதாகவும் தற்போது பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தனி நாடு கோரிக்கையை சீக்கியர்கள் எழுப்பி போராடி வருவதாக ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை தற்போது பலரும் பகிர்ந்து வருவதை காண முடிந்தது. இதற்கு நடுவே 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி ஒருவர் யூடியூபில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்ததும் நமக்கு கிடைத்தது. அதில் தனி நாடு கேட்டு சீக்கியர்கள் போராடுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ 2020 விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புடையது இல்லை என்பது உறுதியானது.
நமக்கு கிடைத்த யூடியூப் பதிவில் வங்க மொழியில் பதிவிடப்பட்டு இருந்ததால், உண்மையில் இது எங்கே, எப்போது நடந்தது என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். வேறு வேறு புகைப்படங்களை பதிவிட்டு ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது 2016ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட அசல் வீடியோ நமக்குக் கிடைத்தது. அதில், அமிர்தசரசுக்கு சிவசேனா வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதன் அடிப்படையில் சிவசேனா, சீக்கியர்கள் போராட்டம், அமிர்தசரஸ் உள்ளிட்ட கீ வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.
அப்போது நமக்கு கிடைத்த 2016ம் ஆண்டு வீடியோ வெளியான தேதிக்கு மிக சமீபத்தில் வெளியான இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் செய்தி ஒன்று கிடைத்தது. அதில், சிவசேனா பேரணி ஒன்று பஞ்சாபில் நடந்ததும், அதைத் தொடர்ந்து பஞ்சாப் சீக்கிய அடிப்படைவாதிகள் ஏராளமானோர் மாநில அரசுக்கு எதிராகவும் சிவசேனாவுக்கு எதிராகவும் சாலையில் திரண்டு போராடியதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
நம்முடைய ஆய்வில், இந்த வீடியோ 2016ம் ஆண்டு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து இந்த பேரணி நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.
இதன் அடிப்படையில் பழைய வீடியோவை எடுத்து தற்போது நடந்தது போல் தகவான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தனி நாடு கோரி போராடும் சீக்கியர்கள் என்று கூறி பரவும் பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
