தமிழிசை போஸ்டரில் அவரது வாயைத் தைக்கும் போராட்டத்தை நடத்திய பாஜக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

தமிழிசை சௌந்தரராஜன் போஸ்டரில் அவரது வாயைப் பெண்கள் தைக்கும் வீடியோ ஃபேஸ்புக், எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பிஜேபினர் நடத்திய தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டம் 😂

இதைவிட பெரிசா யோசிக்க சங்கிகளிடம் என்ன இருக்கிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழிசைக்கு எதிரான கருத்துக்களை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே ஆந்திராவில் நடந்த சந்திரபாபு முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில் அமித்ஷா நேரடியாக தமிழிசையை பொது மேடையில் கண்டித்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் பாஜக தொண்டர்கள் தமிழிசைக்கு எதிராக போராடி வருவதாக வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

வீடியோவை பார்க்க மிகவும் பழையது போல் உள்ளது. இப்படி ஏதேனும் போராட்டத்தை பாஜக தொண்டர்கள் நடத்தினார்களா என்று அறிய கூகுளில், "தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டம்" என்று டைப் செய்து தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு இப்படி ஒரு போராட்டத்தை ஜெ.தீபா பேரவையைச் சேர்ந்தவர்கள் நடத்தியதாக வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தது.

உண்மைப் பதிவைக் காண: oneindia.com I Archive

2018ம் ஆண்டு ஒன் இந்தியா தமிழ் வெளியிட்டிருந்த செய்தியில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிய தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைக்கும் போராட்டத்தை ஜெ.தீபா அமைப்பினர் நடத்தினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதை எதிர்த்துப் போராடுபவர்கள் முட்டாள்கள் என்று தமிழிசை கூறியதால் அவருக்கு எதிராக ஜெ.தீபா அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஊடகம் வெளியிட்டிருந்த வீடியோ சற்று தெளிவாக இருந்தது. அதில், அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் முகம் ஓரளவுக்குத் தெரிகிறது. இவை எல்லாம் இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் பாஜக-வினர் இல்லை என்பதை உறுதி செய்கின்றன.

அண்ணாமலைக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதால் தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டத்தை பாஜக-வினர் நடத்தியது போன்று சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது இல்லை, 2018ல் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தை நடத்தியது பாஜக-வினர் இல்லை, ஜெ.தீபா பேரவையைச் சார்ந்தவர்கள் இதை செய்தனர் என்பதும் உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டத்தை நடத்திய பாஜக-வினர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2018ல் ஜெ.தீபா அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் வீடியோவை இப்போது தமிழிசைக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தியதாக தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தமிழிசை வாயைத் தைக்கும் போராட்டம் நடத்திய பாஜக-வினர் என்ற தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False