
நரேந்திர மோடியை விமர்சித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
திறந்த வெளி வாகனத்தில் கைகளை அசைத்தபடி வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருவர் பாய்ந்து வந்து அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மோதி ஊழல்வாதி என்ற கெஜ்ரிவால் பேச்சுக்கு விழுந்த அறை… ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. நரேந்திர மோடியை ஊழல்வாதி என்று பேசியதால் யாரோ ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அறைந்தது போன்று பதிவிடப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் உச்சத்தில் உள்ள சூழலில், இந்த வீடியோ இப்போது எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
அரவிந்த் கெஜ்ரிவாலை முன்பு ஒருவர் தாக்கியது தொடர்பான நினைவு இருந்ததால், கூகுளில் அது தொடர்பாக தேடினோம். அப்போது, 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஒருவர் தாக்கியதாக நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் செய்திகள் நமக்குக் கிடைத்தன.

2019ம் ஆண்டு டெல்லியில் மோதி நகர் பகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் ரோடு ஷோ நடத்தினார் என்றும் அப்போது சுரேஷ் என்ற 33 வயது நபர் வந்து அரவிந்த் கெஜ்ரிவாலை அறைந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர். கைது செய்யப்பட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த வீடியோவை பார்க்கும் போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசுவது போல் இல்லை. திறந்தவெளி வாகனத்தில் கையசைத்தபடி மட்டுமே வருகிறார். அவரைத்தான் அந்த நபர் தாக்குகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து நரேந்திர மோடியை விமர்சித்துதான் வருகிறார். ஆனால், நாம் ஆய்வக்கு எடுத்துக்கொண்ட பதிவில் கூறியிருப்பது போன்று மோடியை ஊழல்வாதி என்று கூறியதால் இளைஞர் ஒருவர் கெஜ்ரிவாலை அறைந்தார் என்று எந்த செய்தியிலும் கூறவில்லை.
2019ம் ஆண்டு நடந்த வீடியோவை எடுத்து, இப்போது நடந்தது போன்று தோற்றம் ஏற்படும் வகையில், எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற உண்மையை மறைத்து வெளியிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ போதுமான தவறானது என்று என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2019ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்ட வீடியோவை இப்போது நடந்தது போன்று பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:மோடியை ஊழல்வாதி என்று கூறியதால் கெஜ்ரிவாலுக்கு அறை விழுந்ததா?
Written By: Chendur PandianResult: Missing Context
