
‘’கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ 🤔கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிடும் முஸ்லிம் பெண்கள்… போலீசார் வந்து அவர்களைக் கைது செய்தபோது தான், அவர்களனைவரும் மிக மிக தேசபக்தி கொண்ட ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்று தெரியவந்தது. ” 😇 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.
இதனுடன் பர்தா அணிந்த ஆண் ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து பிடிப்பது போன்ற காட்சிகள் கொண்ட ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.
பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட தகவல் உண்மையா என்று நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, இந்த வீடியோவுக்கும், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று தெரியவந்தது.
ஆம், இது கடந்த 2020ம் ஆண்டு ஆந்திராவில் எடுக்கப்பட்ட வீடியோ.
இதன்படி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ஆந்திராவிற்கு சட்டவிரோதமாக, மதுபானம் கடத்திய நபர்களை கர்னூல் போலீசார் கைது செய்தனர். அதில், ஒருவர் புர்கா அணிந்து, உள்ளே மது பாட்டில் ஒளித்து வைத்திருந்தார். அந்த வீடியோவை எடுத்து, தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.
இதுபற்றி ஆந்திரா டிஐஜி அப்போதே, X வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதனையும் கீழே ஆதாரத்திற்காக, இணைத்துள்ளோம்.
எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ கடந்த 2020ம் ஆண்டு ஆந்திராவில் எடுக்கப்பட்ட ஒன்று; புர்கா அணிந்து, சட்டவிரோதமாக மது பாட்டில் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். இதற்கும், தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Title:கர்நாடகாவில் பர்தா அணிந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டனரா?
Fact Check By: Pankaj IyerResult: Misleading
