டாக்காவில் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்துடன் பேரணி சென்ற இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேச தலைநகர் டாக்காவில் ஜெய் ஶ்ரீராம் என்ற முழக்கத்துடன் இந்துக்கள் பேரணியாக சென்றார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காவி நிற ஆடை அணிந்து ஆயிரக் கணக்கானோர் பேரணியாக வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "பங்களாதேஷ் டாக்கா வீதிகளில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்டு இந்துக்கள் ஏற்பாடு செய்த பேரணி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வங்கதேசத்தில் அரசியல் நிலையின்மை காரணமாக அங்குள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதனுடன் பல வதந்திகளும் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இந்த நிலையில் வங்கதேச இந்துக்கள் தங்கள் வலிமையை நிரூபிக்கும் வகையில் டாக்கா நகரில் பேரணி சென்றனர் என்பது போன்று சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
வீடியோவை பார்க்கும்போது, முன்னே செல்லும் வாகனத்தில் ஒருவர் வங்கதேச கொடியை வைத்துள்ளதைக் காண முடிகிறது. அவர்கள் நாடு என்ற வகையில் அது கூட ஏற்றுக்கொள்ளும் வகையிலிருந்தது. ஆனால், ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எதையும் கேட்க முடியவில்லை. ஷேக் ஹசீனா என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் இந்த வீடியோவை ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2023 செப்டம்பரில் யூடியூபில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. வங்க மொழியிலிருந்த பதிவை மொழிபெயர்த்துப் பார்த்தோம். அதில் சத்ரா லீக் டாக்கா தெருக்களை அதிரவைத்து வரலாறு படைத்தது.
வங்கதேச ஊடகங்களில் வெளியான சில வீடியோக்களும் நமக்குக் கிடைத்தன. அதுவும் வேறு கோணத்திலிருந்து எடுக்கப்பட்டது. நம்முடைய தேடலில் இந்த பேரணியின் புகைப்படங்களுடன் 2023 செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவும் கிடைத்தது. அதில். பங்களாதேஷ் சத்ரா லீக் சார்வில் வங்கதேச தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் வங்கதேச தாய் சேக் பாசிலத்துன்னிசா முஜிப் ஆகியோரின் நினைவு தினம் பேரணி நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் வங்கதேசத்தில் இந்துக்கள் பேரணி நடத்தியதாகப் பரவும் வீடியோ தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் கடந்த 2023ம் ஆண்டு சத்ரா லீக் என்ற அவாமிலிக் கட்சியின் மாணவர் அமைப்பு நடத்திய பேரணி வீடியோவை தற்போது இந்துக்கள் பேரணி நடத்தினர் என்று தவறான சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:டாக்காவில் ஜெய் ஶ்ரீராம் முழக்கத்துடன் பேரணி சென்ற இந்துக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False