
கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்… சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க விழாவில்… *2 நிமிடம் 49 வினாடிகள்* தொடர்ந்து சங்கை முழங்கி உலக சாதனை படைத்தார். 👍 *சனாதன சக்தி!* ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ்ஜில் கும்பமேளா நடந்து வருகிறது. அங்கு 2.49 நிமிடங்கள் தொடர்ந்த சங்கு ஊதி உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாக வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருக்கிறார். பிரயாக்ராஜ் கும்பமேளாவில் திரௌபதி முர்மு பங்கேற்றதாக எந்த செய்தியும் இல்லை. எனவே, பழைய வீடியோவை புதிது போல பகிர்ந்திருக்கலாம் என்பதால் அது பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அதே வீடியோ யூடியூபில் பதிவிட்டிருந்தது நமக்கு கிடைத்தத. 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி இந்த வீடியோ யூடியூபில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “கங்கா காட் பகுதியில் ஒருவர் சங்கு ஊதினார், குடியரசுத் தலைவர் முர்மு, வாரணாசி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடிய போது குடியரசுத் தலைவரின் யூடியூப் பக்கத்திலும் அந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. வாரணாசியில் நடக்கும் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்றார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது சங்கு ஊதுவதில் உலக சாதனை ஏதும் நிகழ்த்தப்பட்டதா என்று அறிய தொடர்ந்து தேடினோம். திரௌபதி முர்மு பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இதன் மூலம் கும்பமேளாவில் சங்கு ஊதலில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
கும்பமேளாவில் சங்கு ஊதலில் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று பரவும் வீடியோ 2023ம் ஆண்டு வாரணாசியில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
