
விமானத்தில் பகவத் கீதையை வாசிக்கும் ரஷ்ய அதிபர் புதின் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கிய ரஷ்ய மொழிபெயர்ப்பு பகவத்கீதை புத்தகத்தை ரஷ்ய அதிபர் புதின் வாசிப்பது போன்ற புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில். “பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட அன்பான பரிசான ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ நூலை, அதிபர் புதின் வாசித்துக்கொண்டிருக்கும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பகவத் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கினார். இந்தியாவிலிருந்து திரும்பிச் செல்லும் போது அந்த புத்தகத்தை படித்தபடி புதின் சென்றது போன்று புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
முதலில் இப்படி ஒரு புகைப்படத்தை ரஷ்ய அதிபர் அல்லது ரஷ்ய அரசு தரப்பிலிருந்து வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ரஷ்ய அதிபர் தொடர்பான அனைத்து வெளியீடுகளும் க்ரம்ளின் மாளிகை இணையதளத்தில் வெளியாகும். அதில் புதினின் இந்திய பயணம், மோடி, திரவுபதி முர்மு உடனான சந்திப்பு என பல தகவல் இருந்தன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த புகைப்படமும் அதில் இல்லை. அப்படி இருக்க இவர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக புகைப்படம் கிடைக்க வாய்ப்பில்லை.
ரஷ்யா மற்றும் அந்த நாட்டு அதிபர் இந்த புகைப்படத்தை வெளியிடவில்லை என்றால் இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. இது போலியானதாக அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டிருந்தனர். அரசு தரப்பில், உரிய அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்லது பிரமுகர்கள் தரப்பிலிருந்து இந்த புகைப்படம் வெளியாகவே, பகிரப்படவோ இல்லை என்பது உறுதியானது.

படத்தை உற்று பார்க்கும் போது புத்தகத்தை பிடித்திருக்கும் புதினுக்கு இரண்டு பெருவிரல் இருப்பது போன்று தெரிந்தது. பொதுவாக புகைப்படங்களை ஏஐ மூலம் உருவாக்கும் போது இது போன்ற உருவ குறைபாடுகள் ஏற்படுவது வழக்கமானது. எனவே, இதுவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது.
இதை உறுதி செய்துகொள்ள ஏஐ புகைப்படங்களை கண்டறிய உதவும் இணையதளங்களில் இந்த புகைப்படங்களைப் பதிவேற்றித் தேடினோம். அவையும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்திலும் இந்த புகைப்படம் தொடர்பாக கட்டுரை வௌியாகி இருந்தது. அதிலும், இது ஏஐ மூலம் உருவாக்க்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இடம் பெற்ற புகைப்படம் தவறானது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மோடி பரிசளித்த பகவத் கீதையை விமானத்தில் செல்லும் போது வாசித்த ரஷ்ய அதிபர் புதின் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:பகவத் கீதையை வாசிக்கும் புதின் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered


