
தமிழக கடலில் கேரளா கப்பலில் குப்பை கொண்டு கொட்டியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கப்பல் ஒன்றில் இருந்து கழிவுகள் கொட்டப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா? தமிழக அரசு என்ன செய்துகொண்டுயிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் வைரலாக பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கேரளாவிலிருந்து தமிழக எல்லைப் பகுதியில் மருத்துவ, மிகவும் ஆபத்தான குப்பைகள் கொட்டுவது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது இப்படி கொட்ட வரும் வாகனங்களை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்து, வாகனங்களை ஓட்டி வருபவர்களைக் கைது செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கடல் பகுதிக்கு குப்பை கொண்டு வந்து கொட்டிய கேரளா என்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் இது தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதி என்பதற்கோ, கப்பல் கேரள அரசுக்கு சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. ரகசியமாக குப்பை கொட்டுகிறார்கள் என்றால் அதை ஒருவர் வீடியோ எடுக்கும் அளவுக்கு அனைவருக்கும் தெரியும் வகையில் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. வீடியோவை பார்க்கும் போது அருகருகே இரண்டு திறப்புகள் இருப்பது போலவும் அதிலிருந்து வரும் கழிவுக்கும் கடலில் கொட்டப்படும் கழிவுக்கும் அளவு வித்தியாசம் இருப்பதையும் காண முடிந்தது. எனவே இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த சில நாட்களாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது. ஆனால் எதிலும் இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. அதே போல் எங்கு எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்படவில்லை.
உண்மைப் பதிவைக் காண: instagram.com
சில வீடியோக்களில் Ali Aboutine என்று வாட்டர்மார்க் லோகோ தெளிவாகத் தெரிந்தது. இதன் அடிப்படையில் தேடிய போது யூடியூப், இன்ஸ்டாகிராமில் நமக்கு ப்ரொஃபைல் கிடைத்தது. அதில் ஏஐ ஆர்டிஸ்ட், டிஜிட்டல் கிரியேட்டர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடலில் குப்பை கொட்டப்படுவது போன்று ஏராளமான ஏஐ வீடியோக்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் இது உண்மையானது இல்லை, ஏஐ வீடியோ என்பது தெளிவானது. ஏஐ வீடியோவை எடுத்து தமிழ்நாட்டுக் கடல் பகுதியில் கப்பலில் குப்பை கொட்டிய கேரளா என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது.
முடிவு:
செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி வீடியோ தயாரிக்கும் ஒருவர் வெளியிட்ட வீடியோவை எடுத்து தமிழ்நாடு கடல் பகுதியில் குப்பை கொட்டிய கேரளா என்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:தமிழக கடலில் குப்பை கொட்டிய கேரளா என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
