மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புத்தகம் ஒன்றை வழங்கிவிட்டு அவரது காலில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விழுந்து வணங்குவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “நமது இந்தியபெண் ஜனாதிபதியின் அவல நியை (நிலையை) பாருங்கள். எங்கே சமூக நீதி” என்று டைப் செய்து சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவையும் இதன் ஸ்கிரீன்ஷாட்டையும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் திரவுபதி முர்மு விழுந்தது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்க்க ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ போல உள்ளது. ராஜ்நாத் சிங் காலில் விழும்போது திரவுபதி முர்முவின் முகம் மாறுவதைக் காண முடிகிறது. ஆனாலும், இதைப் பலரும் பகிர்ந்து வரவே இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.
முதலில் வீடியோ காட்சியின் தொடக்கத்தில் வரும் புத்தகம் வழங்கும் பகுதியை மட்டும் தனியாக எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த புகைப்படம் 2025 ஜூன் மாத இறுதியில் மத்திய அரசின் பிஐபி மற்றும் பல செய்தி ஊடகங்களில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. அதில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த போது “விங்ஸ் ஆஃப் அவர் ஹோப்” என்ற புத்தகத்தை வழங்கிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: pib.gov.in I Archive I thehindu.com I Archive
பிஐபி வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோருடன் இணைந்து, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ‘விங்ஸ் டு அவர் ஹோப்ஸ்’ மற்றும் ‘ஆஷோன் கி உதான்’ புத்தகங்களின் இரண்டாவது தொகுதியின் முதல் பிரதிகளை குடியரசுத்தலைவர் திருமதி. திரௌபதி முர்முவிடம் இன்று (ஜூன் 23, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் வழங்கினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவரிடம் புத்தகங்களை வழங்கும் புகைப்படங்களையும் பிஐபி வெளியிட்டிருந்தது. அதில் இடம் பெற்றிருந்த காட்சியை ஐஏ மூலம் வீடியோவாக மாற்றியிருப்பது தெரிந்தது. உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அதை மத்திய அமைச்சரோ, குடியரசுத் தலைவர் அலுவலகமேதான் வெளியிட்டிருக்கும். ஆனால் நம்முடைய ஆய்வில் அப்படி எந்த ஒரு செய்தியோ, பதிவோ கண்டறிய முடியவில்லை.
நமக்குக் கிடைத்த செய்தியில் திரவுபதி முர்முவிடம்தான் அமைச்சர் புத்தகங்களை வழங்கியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலோ குடியரசுத் தலைவர் தான் ராஜ்நாத் சிங்குக்கு புத்தகத்தை வழங்குவது போல இருந்தது. இந்த புகைப்படம் ஜூன் மாதம் வெளியாகி இருந்தது. ராஜ்நாத் சிங் காலில் விழுந்திருந்தால் அது அப்போதே மிகப்பெரிய செய்தியாக வெளியாகி இருந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. இவை எல்லாம் இந்த வீடியோ போலியானது என்பதை உறுதி செய்தன.

இந்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ஏஐ காட்சிகளைக் கண்டறிய உதவும் இணையதளங்களில் பதிவேற்றித் தேடினோம். அவைகளும் இது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்த திரவுபதி முர்மு என்று பரவும் வீடியோ போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் திரவுபதி முர்மு விழுந்ததாக பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது, போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram
Title:ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசுத் தலைவர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: Altered


