தங்க உடை அணிந்த ஆனந்த் அம்பானி – ராதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social சமூகம்

விரைவில் திருமணம் செய்ய உள்ள அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியும் மருமகள் ராதிகா மெர்ச்சன்டும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை அணிந்திருந்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் தங்க நிறத்தில் ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*தங்க ஆடை அணிந்த அம்பானியின் மகன் , மருமகள் ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் 2024 ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் பல நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆனந்த் அம்பானியும் அவர் திருமணம் செய்ய உள்ள ராதிகாவும் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடையை அணிந்திருந்தனர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் போல் உள்ளதால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: instagram

ஆனந்த் அம்பானி சற்று உடல் பருமனானவர். ஆனால் இந்த புகைப்படத்தில் சற்று உடல் எடையைக் குறைத்தவர் போல உள்ளார். மேலும் இருவரின் தலையையும் தனியாகப் புகைப்படத்தில் ஒட்ட வைத்தது போல் உள்ளது. இவை எல்லாம் இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்பதை தெளிவுபடுத்தின. இருப்பினும் ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில், இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். 

அப்போது ananthambani என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அது ஆனந்த் அம்பானியின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கம் இல்லை. ஆனால் அதில், அழகான செயற்கை நுண்ணறிவு என்று அர்த்தம் வரும் வகையில் Beauty of AI….. என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இது ஏஐ புகைப்படம் தானா என்று அறிய, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஏஐ புகைப்படம் கண்டறியும் தளம் ஒன்றில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 95 சதவிகிதம் இது செயற்கை நுண்ணறிவு புகைப்படம் என்று நமக்கு முடிவு கிடைத்தது. இவை எல்லாம் இந்த புகைப்படம் உண்மையானது இல்லை என்பதை உறுதி செய்தன.

முடிவு:

ஆனந்த் அம்பானி மற்றும் அவர் திருமணம் செய்ய உள்ள ராதிகா மெர்ச்சன்ட் தங்கத்தால் செய்யப்பட்ட ஆடையை அணிந்திருந்தனர் என்று பரவும் புகைப்படம் உண்மையில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தங்க உடை அணிந்த ஆனந்த் அம்பானி – ராதிகா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered