“கிருஷ்ணரின் துவாரகை நகரம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா | India சமூக ஊடகம் | Social

கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடலுக்கு அடியில் கிருஷ்ணரின் உருவ சிற்பங்களுடன் கூடிய நகரை ஆய்வாளர்கள் கண்டறிந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*ஸ்ரீ கிருஷ்ணர் ஆட்சி செய்த துவாரகை நகரத்தை நாம் அனைவரும் இன்று பார்ப்போம். காலங்கள் கடந்தாலும் அதன் அழகு மாறாமல் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மகாபாரத கதையில் வரும் கிருஷ்ணர் துவாரகை நகரத்தை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. அது கடலில் மூழ்கிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. அந்த நகரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறது. துவாரகை இருந்ததாக நம்பப்படும் தற்போது கடலுக்கு அடியில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் சில பொருட்கள் கிடைத்துள்ளன. அவை 2000ம் ஆண்டுக்குப் பிற்பட்டவை என்று கூறப்படுகிறது. நகரத்தின் பழைமையான குடியிருப்பு உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், கடலுக்கடியில் ஸ்கூபா டைவிங் செய்து பழைய துவாரகை நகரை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது போன்று வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவை பார்க்கும் போது கடல் மட்டத்திலிருந்து சில அடி தூரத்திலேயே அந்த நகரம் இருப்பது போல உள்ளது. அந்த பகுதி கட்டிடங்கள் இடிந்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. ஆனால், சிலைகள், கோவில்கள், கட்டிடங்களின் மேற்பரப்பு மீது எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பல ஆண்டுகளாக நன்கு பராமரித்த நிலையில் அவை இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. பார்க்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ போல உள்ளது.

துவாரகை நகரத்தை இந்திய அரசு கண்டுபிடித்ததாக, அந்த கட்டிடங்களின் வீடியோவை வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. உண்மையில் அப்படி கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் பாஜக-வினர் மற்றும் மத்திய அரசு மிகப்பெரிய அளவில் கொண்டாடியிருக்கும். ஆனால், ஆய்வு நடந்து வருவதாக செய்திகள் கிடைத்தனவே தவிர கண்டுபிடிக்கப்பட்டதாக எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive

வீடியோவில் mbaiarts என்று இன்ஸ்டாகிராம் ஐடி இருந்தது. அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்று தேடிப் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் இருந்தது. அதில், “இந்த வீடியோவை உருவாக்கியது @mbaiarts” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அனைத்து காட்சிகளும் செயற்கை நுண்ணறிவால் (ஏஐ)- உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

வீடியோவை உருவாக்கியவரே இது ஏஐ வீடியோ என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்களோ உண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட துவாரகை நகரம் என்பது போன்று வதந்தியைப் பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கடலுக்கு அடியில் உள்ள கிருஷ்ணரின் துவாரகை நகரத்தின் அழகிய காட்சி என்று பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை அதை உருவாக்கியவரே உறுதி செய்துள்ளார். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:“கிருஷ்ணரின் துவாரகை நகரம்” என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Altered

Leave a Reply