‘அண்ணாமலை உண்மை பேசும் வரை’ என்று ஏதேனும் கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்று கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கடை ஒன்றில் “அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது” என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது போன்று புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு 2023 அக்டோபர் 25ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தவறான தகவலைச் சொல்வதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அதைக் கிண்டல் செய்யும் வகையில் அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்று கடையில் அறிவிப்பு வைக்கப்பட்டது போன்று புகைப்படத்தைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்படத்தைப் பார்க்கும் போதே எடிட் செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இதன் உண்மையான புகைப்படத்தைத் தேடினோம். இந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, பல ஆண்டுகளாக இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

உண்மைப் பதிவைக் காண: sharechat.com I Archive

ஆனால், “அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது” என்ற வாசகம் இல்லை. “கன்னித்தீவு கதை முடியும் வரை கடன் கிடையாது” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. தினத்தந்தி நாளிதழில் கன்னித்தீவு பகுதி பல வருடங்களாக வெளியாகி வருகிறது. அந்த தொடர் முடியும் வரை கடன் கிடையாது என்று நையாண்டியாக வைத்துள்ளனர். இந்த கடை எங்கு உள்ளது என்ற விவரம் இல்லை. 

உண்மைப் பதிவைக் காண: sharechat.com I Archive

தொடர்ந்து தேடிய போது ஷேர்சாட்-ல் இந்த படம் மற்றும் இதே கடையின் மற்றொரு புகைப்படம் பகிரப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதிவிடப்பட்டிருந்த அந்த படத்தில் விலை உயர்வு 20-10-2018 முதல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2018ம் ஆண்டில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகிறது. 2018ல் அண்ணாமலை கர்நாடகாவில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 2019ல் தான் அவர் அவர் ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கன்னித் தீவு தொடார்பாக கடையில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை புகைப்படத்தை எடுத்து “அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது” என்று அரைகுறையாக போட்டோஷாப் முறையில் மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அண்ணாமலை உண்மை பேசும் வரை கடன் கிடையாது என்று அறிவிப்பு பலகை வைத்த கடைக்காரர் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘அண்ணாமலை உண்மை பேசும் வரை’ என்று ஏதேனும் கடையில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian 

Result: Altered