ஜி ஸ்கொயர் சோதனை விவகாரம்: சவுக்கு சங்கர் தலைமறைவு என்று பரவும் செய்தி உண்மையா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

ஜி ஸ்கொயர் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை அளிக்கும்படி சவுக்கு சங்கருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதாகவும் அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் தலைமறைவாகிவிட்டார் என்றும் ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ஏபிபி நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஜி ஸ்கொயர் மற்றும் சபரீசன் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் கூறிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சோதனை செய்ததில் எதுவும் கிடைக்காததால், உரிய ஆதாரத்துடன் தங்கள் அலுவலகத்தில் ஆஜராகும்படி சவுக்கு சங்கருக்கு சிபிஐ சம்மன். சம்மனுக்கு பதில் அளிக்காமல் சவுக்கு சங்கர் தலைமறைவு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை R Ayyappan என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 2ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். 

உண்மை அறிவோம்:

ஜி ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் எந்த முறைகேடும் நடந்ததாகக் கண்டறியப்படவில்லை என்று தி.மு.க ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அதே நேரத்தில் பல நூறு கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சில வலதுசாரி ஊடகங்கள், ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால், வருமானவரித் துறையிடம் இருந்து இந்த கட்டுரை வெளியிடப்படும் வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஜி ஸ்கொயர் மற்றும் அந்த நிறுவனத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு உள்ள தொடர்பு பற்றி சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிட்டு வந்த யூடியூபர் சவுக்கு சங்கருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருப்பதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இதை ஒரு ஊடகமே செய்தியாக வெளியிட்டது போல பகிரவே, இது பற்றி ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், டிசைன் வழக்கமாக ஏபிபி நாடு வெளியிடும் நியூஸ் கார்டில் இருப்பது போல இல்லை. 

எனவே, முதலில் ஏபிபி நாடு வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. இந்த நியூஸ் கார்டை ஏபிபி நாடு டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி, இது உண்மையா எனக் கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

சவுக்கு சங்கருக்கு வருமானவரித் துறையிடமிருந்து சம்மன் ஏதும் வந்துள்ளதா, அது பற்றி செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில், இந்த நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சவுக்கு சங்கர் தலைமறைவு என்று ஏபிபி நாடு வெளியிட்டது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஜி ஸ்கொயர் சோதனை விவகாரம்: சவுக்கு சங்கர் தலைமறைவு என்று பரவும் செய்தி உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply