எம்.பி-யின் கேள்விக்கு பதில் கூற திணறிய மோடி, அமைச்சர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Altered அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பிரதமர் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் திணறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

எம்.பி ஒருவர் பேச பேச பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் பதில் கூற முடியாமல் திணறியபடி அவரை பார்ப்பது போன்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேள்வி கேட்கப்படும்போது #சங்கீகளின் #மூஞ்சிகளை பாருங்கள்…🤣🤣🤣🤭 #புல்டோசர் வைத்து #மிரட்டி மக்களை #கேள்வி கேட்க விடாமல் செஞ்சது தாண்டா உங்க #சாதனை. கடந்த #காலங்களில் உணவுப் பொருட்களின் #விலை?  #இப்போ என்ன #விலை? இதெல்லாம் #உங்களுக்கு எப்படிடா தெரியும்? #மிடில் கிளாஸ் #பிரச்சினை எதுவும் தெரியாத நீ #விஸ்வகுருவா ? மயி..குருவா ? #செருப்படி கேள்விகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் பேசும் போது பதில் கூற முடியாமல் பிரதமர் உள்ளிட்டவர்கள் திணறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் திடீரென்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் வருகிறார். அவரும் பதில் கூற முடியாமல் நிற்பது போன்று வீடியோ உள்ளது. நாடாளுமன்றத்தில் மாநில முதலமைச்சர்களை எல்லாம் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ கிடைக்கவில்லை. ஆனால், வீடியோவில் பேசுபவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சயோனி கோஷ் (Sayani Ghosh) என்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் Sansad TV-யின் யூடியூப் பக்கத்தில் சயோனி கோஷ் பேசிய வீடியோக்களில் இருந்து அதை தேடி எடுத்தோம். நாடாளுமன்ற நிகழ்வுகளை தனியார் வீடியோ எடுத்து வெளியிட முடியாது. நாடாளுமன்றத்தின் Sansad TV மட்டுமே வீடியோ எடுத்து வெளியிடும். அப்படி Sansad TV வெளியிட்டிருந்த வீடியோவில் எடிட் செய்திருப்பது தெரியவந்தது.

அந்த வீடியோவை முழுமையாக பார்த்தோம். அதில் பிரதமர் நரேந்திர மோடி அப்போது அவையில் இல்லை என்பது தெரிந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையிலிருந்து உறுப்பினரின் பேச்சை கேட்கிறார். மற்றபடி பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எல்லாம் அந்த வீடியோவில் இல்லை. பிரதமரின் வீடியோ காட்சியை மட்டும் எடுத்து கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவிட்டு தேடினோம். அப்போது அது 2025ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி-யின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்டோர் திணறினர் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகிறது.

முடிவு:

எம்.பி-யின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் திணறிய பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என்று பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

FacebookI X PostI Google News ChannelI Instagram

xa
Avatar

Title:எம்.பி-யின் கேள்விக்கு பதில் கூற திணறிய மோடி, அமைச்சர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian  

Result: Altered

Leave a Reply