இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

Update: 2024-10-06 14:33 GMT

காஸா, லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது உயிரிழந்த இஸ்ரேல் ராணுவ வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:


உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

சவப் பெட்டிகள் மீது இஸ்ரேல் கொடி போர்த்தப்பட்டிருக்கும் புகைப்படம் மற்றும் உடல்களை அடக்கம் செய்யும் இரண்டு புகைப்படங்கள் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "போரில் உயிர் நீத்த இஸ்ரேல் நாட்டு இராணுவ வீரர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வினை விதைத்தால் அதை அறுவடை செய்தே ஆகவேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

போர் என்று வந்தால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஒரு உயிரைக் கூட இழக்காமல் போர் செய்ய முடியாது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் போர் காரணமாக இஸ்ரேல் பல ராணுவ வீரர்களை இழந்துவிட்டது என்பது போன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் எல்லாம் இப்போது எடுக்கப்பட்டதா அல்லது பழைய புகைப்படங்களா என்று அறிய ஆய்வு செய்தோம்.

Archive

முதலில் சவப்பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தைக் கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது 2024 செப்டம்பர் 5ம் தேதி ஜெருசலேமில் நடந்த போராட்டத்தில் வைக்கப்பட்ட டம்மி சவப்பெட்டிகள் என்பது தெரியவந்தது. ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்ற இஸ்ரேல் மக்களில் 27 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். அதைக் குறிக்கும் வகையில் 27 டம்மி சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகச் செய்திகள் நமக்குக் கிடைத்தன.


உண்மைப் பதிவைக் காண: misbar.com I Archive

அடுத்ததாக, சவப்பெட்டியை பள்ளத்திற்குள் இறக்கக் கொண்டு செல்லும் புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டதா என்று அறிய அதை ஆய்வுக்கு உட்படுத்தினோம். அப்போது அந்த படமும் இப்போது எடுக்கப்பட்டது இல்லை என்பது தெரியவந்தது. 2023ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஹமாஸ் பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த இஸ்ரேலியர்களை விடுவிக்க இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காசாவுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது, Sergeant Kiril Brodski என்ற வீரர் உயிரிழந்தார். அவரது உடல் காசாவில் இருந்தாலும், அவர் நினைவாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது உடல் பின்னர் கண்டெடுக்கப்பட்டதாகவும் வேறு செய்திகளும் நமக்குக் கிடைத்தன.


உண்மைப் பதிவைக் காண: christianindex.org I Archive

மூன்றாவதாக சவப்பெட்டியை ராணுவ வீரர்கள் தூக்கிச் செல்லும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். அந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடிய போது அது 2022ம் ஆண்டு புகைப்படம் என்று தெரியவந்தது.


உண்மைப் பதிவைக் காண: timesofisrael.com I Archive

பாலஸ்தீனத்தைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், பழைய புகைப்படங்களை எடுத்து ஏராளமான இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இப்போது பகிர்ந்திருப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஹமாஸ் அமைப்பினர் கடத்திய இஸ்ரேலியர்களை மீட்க வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மாதிரி சவப்பெட்டிகள் புகைப்படம் மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட பழைய புகைப்படங்களை எடுத்து இப்போது நடந்து வரும் போரில் உயிரிழந்த இஸ்ரேலிய வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகிறது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram
Claim :  இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் காட்சி என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Claimed By :  Social Media Users
Fact Check :  FALSE
Tags:    

Similar News