சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை மீறி கனகசபையில் பொது மக்கள் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் பார்க்கும் என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அண்ணாமலை புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "தீட்சிதர்களை மீறி பொதுமக்கள் கனகசபையில் கால் வைத்தால் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் பார்க்கும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை Govindaraj Ramaswamy என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூலை 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கும் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வருகிறது. சமீபத்தில் கனகசபையில் பொது மக்களை அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் அறிவிப்புப் பலகை வைத்தனர்.

இந்த விவகாரத்தில் பொது மக்களுக்கு ஆதரவாக அறநிலையத் துறை தலையிட்டது. இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது. தீட்சிதர்களுக்கு ஆதரவாக போராடுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். இந்த சூழலில், கனகசபை மீது பொது மக்கள் அண்ணாமலையின் சிங்கமுகத்தை தமிழகம் பார்க்கும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டின் தமிழ் ஃபாண்ட், பின்னணி வடிவமைப்பு எல்லாம் புதிய தலைமுறை வௌியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. மேலும், அண்ணாமலை இப்படி கூறியிருந்தால் இது தொடர்பான செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவானது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 2, 2023 அன்று வௌியான நியூஸ் கார்டுகளை பார்த்தோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு இருந்தது. ஆனால் அதில், "தீட்சிதர்களுக்காக போராடுவேன்: அண்ணாமலை. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு தமிழக அரசு தொந்தரவு கொடுத்தால் போராடுவேன்" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவானது. இதை உறுதி செய்துகொள்ள, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்!

முடிவு:

சிதம்பரம் கனகசபையில் பொது மக்கள் கால் வைத்தால் சிங்க முகத்தைப் பார்ப்பீர்கள் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சிதம்பரம் கனகசபை விவகாரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தாரா அண்ணாமலை?

Written By: Chendur Pandian

Result: False