
40 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்ட அத்தி வரதர் சிலை என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Hindu Samayam என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை ஜூன் 28, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில், அவர்களின் இணையதள செய்தியின் லிங்கையும் இணைத்துள்ளனர்.
அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். செய்தியின் உள்ளே, காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் திருக்குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்குப் பின் அத்தி வரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக, ஏராளமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
உண்மை அறிவோம்:
சில நாட்கள் முன்பாக, அத்திவரதர் தரிசனம் காஞ்சிபுரத்தில் நடந்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் வதந்திகள் பரவிவந்தன. இதன்பேரில், நாமும் உண்மை கண்டறியும் சோதனை ஒன்றை நடத்தி அது தவறு என்றும், ஜூலை 1ம் தேதிதான் அத்தி வரதர் தரிசன நிகழ்வு தொடங்க உள்ளதென்றும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில்தான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இதன்படி,
ஜூன் 28ம் தேதியன்று அதிகாலை அத்திவரதர் சிலை குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது உண்மையா என தேடிப் பார்த்தோம். அப்போது, இது உண்மைதான் என தெரியவந்தது. 16 நாக சிலைகளுக்கு இடையே கிடந்த அத்திவரதர் சிலை, குளத்தின் நீரை முற்றிலுமாக வெளியேற்றிய பின், பலத்த பாதுகாப்புடன் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புதியதலைமுறை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதன்படி, கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், 1979 ஜூலை 2ம் தேதியன்று அத்தி வரதர் தரிசனம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, தற்போதுதான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஜூலை 1ம் தேதி தொடங்கி, அடுத்த 48 நாட்களுக்கு அத்தி வரதர் தரிசனம் நடைபெற உள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள், ரயில் மற்றும் பேருந்து சேவைகள் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் காலை முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே இந்த 48 நாட்களும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி சுமார் 1 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை காண வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் நம்மை பிரமிக்கச் செய்கின்றன. இதுபற்றி நியூஸ் டுடே வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அத்திவரதர் வைக்கப்பட்டிருந்த திருக்குளம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பற்றிய காட்சிகளும், வரும் நாட்களில் நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் நடைபெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகள் பற்றிய விவரங்களும் அறிய கீழ்க்கண்ட வீடியோவை பாருங்கள்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி அத்தி வரதர் தரிசனம் ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது என்றும், இதையொட்டி, ஜூன் 28 அதிகாலை நேரத்தில் அத்தி வரதர் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டார் என்றும் உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான ஒன்றுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக நிகழ்வு என்பதால் தமிழர்கள் பலரும் இந்த செய்தியை வைரலாக சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள் என்பதை உணர முடிகிறது.

Title:40 ஆண்டுகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர்: உண்மை என்ன?
Fact Check By: Parthiban SResult: True

The image of Athi Varadar in water is not true, check his right hand position its pointing down whereas photos of Athi varadar shows his hand pointing up