
பாகிஸ்தானின் ஜின்னா கடற்படைத் தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் தாக்கியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
வெடிகுண்டு வெடித்து தீப்பிழம்பு எழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது பலிசிஸ்தானில் உள்ள ஜி ன்னா கடற்படை தளம். பாகிஸ்தானில் கராச்சியை அடு த்து பலுசிஸ்தானில் தான் பாகிஸ்தானின் 2 வது பெரிய கடற்படை தளம் இருக்கிறது. அதன் பெயர் ஜின்னா கடற்படை தள ம்.இது பலுசிஸ்தானில் உள்ள குவாடர் மாவட்டத்தில் உள்ள ஓர்மரா என்கிற நகரத்தில் இரு க்கிறது.
குவாடரில் உள்ள குவாடர் துறை முகம் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள வர்த்தக துறைமுகம்.இது தான் இந்தியாவின் டார்கெட். இந்த குவாடர் துறைமுகத்திற்கு சுமார் 300 கிலோ மீட்டர் தொ லைவில் தான் பாகிஸ்தானின் 2 வது பெரிய கடற்படை தளமான ஜின்னா கடற்படை தளம் இருக்கிறது. இந்த ஜின்னா கடற்படை தளத்தை பலுசிஸ்தான் விடுதலை ஆர்மி தாக்கி இருப்பதாக தெரிகிறது. தாக்குதல் பற்றிய வீடியோவும் வருகிறது. வீடியோவின் உண்மை தன்மை தெரியவில்லை. ஆனால் ஜின்னா கடற்படை தளத்தை பலுசிஸ்தான் லிபரேசன் ஆர்மி தாக்கி இருப்பது 100% உண்மையான செய்தியாகும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. பாகிஸ்தானின் துறைமுகம் அல்லது கடற்படைத் தளம் தாக்கப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை. 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பலுசிஸ்தான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் கடற்படை விமான தளமான பிஎன்எஸ் சித்திக்கை (PNS Siddique) தாக்கியதாக மட்டுமே செய்தி கிடைத்தது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததாக செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜின்னா கடற்படைத் தளம் தாக்கப்பட்டதாக, சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படைத் தளமான ஜின்னாவில் தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு சித்திக் கடற்படை தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக வௌியான செய்திகளில் சித்திக்தான் பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படைத் தளம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2024ல் சித்திக் கடற்படைத் தளம் தாக்கப்பட்ட செய்தியை ஜின்னா கடற்படைத் தளம் தாக்கப்பட்டதாக இப்போது தவறாக பகிர்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த வீடியோ பாகிஸ்தான் கடற்படைத் தளம் தாக்குதலின் போது பதிவானதா என்பதை அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2024ம் ஆண்டு நவம்பரிலிருந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.
அதில், “லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பாகிஸ்தானின் ஜின்னா கடற்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் காட்சி என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
2024ல் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் வீடியோவை பாகிஸ்தானின் ஜின்னா கடற்படைத் தளம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பாகிஸ்தான் கடற்படைத் தளம் தாக்கப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
