
காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலையில் பிரதமர் நரேந்திர மோடி கட்டியுள்ள பிரம்மாண்ட பாலம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆற்றின் மீது இரண்டு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட பாலத்தில் வாகனங்கள் சென்று வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் ஶ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் என்.எச் 44 முழுமையடைந்தது என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், ஶ்ரீநகர் செல்லும் வழி, ஜம்மு செல்லும் வழி என்று அம்புக்குறியிட்டு காட்டப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “காங்கிரஸ் இது முடியாது என்ற திட்டங்கள் பல…. என பல திட்டங்களை முடித்து நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறது பிரதமர் மோடி..! அதில் ஸ்ரீநகர் to டெல்லி NH44 பணிகள் முடிவடைந்தது…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
காஷ்மீரில் செனாப் (Chenab) ஆற்றின் மீது கட்டப்பட்ட பிரம்மாண்டமான ரயில்வே பாலத்தை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியால் கட்ட முடியாது என்று கூறப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் ஒன்றை காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கட்டியுள்ளது என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்பு இதே போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டது. அப்போது அது சீனாவில் உள்ள பாலம் என்று உண்மை கண்டறிந்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதே பாலத்தின் வேறு ஒரு வீடியோவை தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பதிவிட்டது போல இருந்தது. எனவே, இதை உறுதி செய்துகொள்ள ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2025 ஜனவரி முதல் வாரத்தில் இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. 5ALevelScenery என்ற சீன யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோ ஜனவரி 2, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில், சீனாவின் குய்சோ மாகாணத்தின் ஜூனியில் உள்ள டஃபாகு பாலம் (Dafaqu Bridge, Bridges in Zunyi, Guizhou Province, China) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சீனர்கள் பலரும் இந்த பாலம் சீனாவில் உள்ளது என்று குறிப்பிட்டு அப்போது பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது.
உண்மைப் பதிவைக் காண: globaltimes.cn I Archive I highestbridges.com I Archive
கூகுளில் DAFAQU BRIDGE என்று டைப் செய்து தேடினோம். அப்போது சீன அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான குளோபல் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாலத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவுடன் செய்தி வெளியாகி இருந்ததை காண முடிந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பாலம் சீனாவில் உள்ளது என்பதை உறுதி செய்கின்றன.
முடிவு:
சீனாவில் கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலத்தின் வீடியோவை காஷ்மீரில் மோடி கட்டிய பாலம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:காஷ்மீரில் கட்டப்பட்ட புதிய பாலம் என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
