
பசுவை தாக்கி, கொடுமைப்படுத்திய இளைஞரை போலீசார் தாக்கி தண்டனை கொடுத்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: X Post I Archive
இளைஞர் ஒருவர் நின்றுகொண்டிருந்த கன்று ஒன்றின் கழுத்தைப் பிடித்து தரையில் சாய்த்து கொடுமை செய்யும் வீடியோ மற்றும் இளைஞர் ஒருவரைக் காவல் துறையினர் தாக்கும் வீடியோவை ஒன்று சேர்த்து ஒரே பதிவாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வாய்யில்லாத ஜீவன கொடுமை செஞ்சா.. அதான் அனுபவிடா..நாயே!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கன்றை கொடுமை செய்த இளைஞரை போலீசார் அடித்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று எந்த தகவலும் இல்லை. இந்த இரண்டு வீடியோவில் உள்ள நபரும் ஒருவரா, இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று அறிய ஆய்வு செய்தோம்.
முதலில் கன்றை சித்ரவதை செய்யும் வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். ஆனால் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்ற எந்த தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கலாம், இந்த நபர் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். ஆனால் அந்த நபர் பற்றி நமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அடுத்து போலீசில் அடிவாங்கும் இளைஞர் வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த நபர் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பியதால் தாக்கப்பட்ட நபர் இல்லை, மொபைல் போன் திருட்டு தொடர்பாக தாக்கப்பட்ட சிறுவர்கள் என்று செய்தி நமக்குக் கிடைத்தது.
உண்மைப் பதிவைக் காண: dtnext.in I Archive I indiatimes.com I Archive
அதன் அடிப்படையில் சில முக்கிய வார்த்தைகளைப் பதிவிட்டு தேடிய போது, உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் உள்ள பாலுவா காவல் நிலையத்தில் மொபைல் போன் கடையில் மொபைல் போன் திருட்டு சம்பவம் தொடர்பாக இவர்கள் தாக்கப்பட்டதாகவும், சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
இதன் மூலம் பசுவைத் தாக்கிய இளைஞருக்கு போலீசில் தண்டனை கிடைத்தது என்று பரவும் பதிவு தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் மொபைல் போன் திருடிய சிறுவர்களை போலீஸ் தாக்கிய வீடியோவை பசுவை தாக்கியவருக்கு போலீஸ் கொடுத்த அடி என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:பசுவை சித்ரவதை செய்த இளைஞரை தண்டித்த காவல்துறை என்று பரவும் வீடியோ உண்மையா?
Written By: Chendur PandianResult: False
