
நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிவிட்டு, நாடாளுமன்ற கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அவையில் அழுது நடித்த ஒவைசி கேன்டினில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரட்டை அடிக்கும் காட்சி 😁
திருந்துங்கபா ஒவைசி உத்தமன் என்று நம்பும் அப்பாவி முஸ்லிம்களே. ..இவர்கள் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கபடவேடதாரிகள் என்பதை அறியுங்கள் ..காவி சங்கி பச்சை சங்கி இணைந்து இருக்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாடாளுமன்றத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக ஏப்ரல் 6, 2025 அன்று குடியரசுத் தலைவர் அந்த திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். நாடாளுமன்றத்திற்குள் வக்ஃப் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை அசாதுதீன் ஓவைசி கடுமையாக எதிர்த்ததாகவும், அதன் பிறகு நாடாளுமன்ற உணவகத்தில் வைத்து பாஜக உறுப்பினர்களுடன் அரட்டை அடித்தார் என்றும் வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ ஜனவரி 2025ல் வெளியாகி இருப்பது தெரிந்தது. அதாவது வக்ஃப் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பாக இந்த வீடியோவை ஏஎன்ஐ, பிடிஐ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டிருந்தன.
அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் 2024 தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் கூட்டுக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி-யுமான ஜகதாம்பிகா பாலுடன் கலந்துரையாடினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இந்த நிகழ்ச்சி நடந்தது என்பது தவறானது என்பது உறுதியாகிறது.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை பாஜக அரசு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்த போது, நாடாளுமன்ற மக்களவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து 31 எம்.பி-க்கள் கொண்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த குழுவில் ஓவைசியும் ஒரு உறுப்பினர். கூட்டு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் ஓவைசி பங்கேற்றதை நாடாளுமன்ற கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்தார் என்று தவறாகப் பகிர்ந்திருப்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நாடாளுமன்ற கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த அசாதுதீன் ஓவைசி என்று பரவும் வீடியோ அவர் கூட்டு நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பங்கேற்றது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கேன்டீனில் பாஜக எம்.பி-க்களுடன் அரட்டை அடித்த ஓவைசி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
