ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “அம்மாவை கண்டேன் – எடப்பாடி. இன்றைய நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஸ்மிருதி ராணி வடிவில் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை கண்டேன் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை தனுஷ் கோடி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 9ம் தெதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது ஃபிளையிங் கிஸ் கொடுத்தார் என்று பா.ஜ.க பெண் எம்.பி-க்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதுவும் அமைச்சர் ஸ்மிருதி இரானியைப் பார்த்து சைகை செய்தார் என்று அவைத் தலைவருக்கு எழுதிய புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடக்காத விஷயத்தை நடந்ததாக அபாண்டமாகக் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானி வைத்துள்ளார் என்று காங்கிரஸ், தி.மு.க-வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் முன்பு தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா நடக்காத விஷயத்தை நடந்தது என்று நாடகமாடியதாகவும் அவரைப் போலவே ஸ்மிருதி இரானி நாடகமாடி வருகிறார் என்றும் விமர்சித்து வருகின்றனர். தமிழக சட்டமன்ற விவகாரத்துக்குள் செல்லவில்லை.

தற்போது, ஜெயலலிதாவை ஸ்மிருதி இரானியுடன் ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமி புகழ்ந்தது போன்று சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இப்படி எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க மாட்டார்… அப்படிக் கூறியிருந்தால் அது தொடர்பான செய்தி எல்லா ஊடகங்களிலும் வெளியாகி இருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் இல்லை. மேலும் இந்த நியூஸ் கார்டும் தந்தி டிவி வெளியிடும் நியூஸ் கார்டு போல இல்லை. தமிழ் ஃபாண்ட் வித்தியாசமாக உள்ளது. எனவே, விஷமத்தனமாக இந்த நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டிருப்பது தெளிவானது. இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்வையிட்டோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவைப் பார்த்தேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது  என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஸ்மிருதி இரானி வடிவில் ஜெயலலிதாவை கண்டேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Written By: Chendur Pandian 

Result: False