பிரபாகரன் படம் விவகாரம்: பல்டியடித்தாரா சங்ககிரி ராஜ்குமார்?

அரசியல் சார்ந்தவை | Political தமிழ்நாடு | Tamilnadu

பிரபாகரன் – சீமான் புகைப்பட விவகாரம் தொடர்பாக சங்ககிரி ராஜ்குமார் பல்டியடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்த 19 விநாடி பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அந்தப் புகைப்படம் உண்மைதான் ஒரே நாளில் பல்டியடித்த இயக்குநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்தப் புகைப்படம் உண்மைங்கறத தான் நான் திரும்பத் திரும்ப சொல்றேன்” ஒரே நாளில் அந்தர் பல்டி அடித்த எடிட்டர் சோகத்தில் சுபவீ மற்றும் கொளத்தூர் மணி‌” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: x.com I Archive

உண்மை அறிவோம்:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் தொடர்பாக சமீபத்தில் திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர் தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படத்தை தான்தான் எடிட் செய்து கொடுத்தேன் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில், இந்த புகைப்படம் உண்மை என்று சங்ககிரி ராஜ்குமார் கூறியதாக வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

வீடியோவில் நக்கீரன் இதழின் லோகோ உள்ளது. எனவே, எடிட் செய்யப்பட்டதாக கூறியது தவறு, இந்த புகைப்படம் உண்மையில் எடுக்கப்பட்டது என்று சங்ககிரி ராஜ்குமார் பல்டி அடித்து விளக்கம் கொடுத்துள்ளாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு செய்தியும், வீடியோவும் வெளியாகவில்லை.

நக்கீரன் இதழுக்கு சங்ககிரி ராஜ்குமார் அளித்த பேட்டியை பார்த்தோம். இப்போது இந்த விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று பேட்டி எடுத்தவர் கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் அளித்த சங்ககிரி ராஜ்குமார், “அவர் போயிருக்கலாம், போகாமல் இருந்திருக்கலாம், எனக்கு அது பத்தின தகவல் தெரியாது, இந்த புகைப்படம் உண்மைதான் என்று திரும்ப திரும்ப சொல்றேன்” என்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “அந்த குறிப்பிட்ட  புகைப்படத்தை நான் எடிட் செய்து கொடுத்தேன் என்பது 100 சதவிகிதம் உண்மை” என்று கூறுகிறார். இதை வீடியோவின் 10.44வது நிமிடத்தில் மிகத் தெளிவாக காணலாம்.

எடிட் செய்த படம் என்பது உண்மை என்ற அர்த்தத்தில் அவர் பேட்டி அளித்துள்ளார். பேட்டியின் சில விநாடிகளை மட்டும் எடுத்து சங்ககிரி ராஜ்குமார் பல்டி அடித்துவிட்டார் என்று தவறாக பகிர்ந்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. முழு வீடியோவையும் பார்த்தால் சங்ககிரி ராஜ்குமார் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதை காணலாம். இதன் மூலம் பல்டி அடித்தார் என்று பரவும் வீடியோ முழுமையற்றது, தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதியாகிறது.

முடிவு:

சங்ககிரி ராஜ்குமாரின் முழு பேட்டியையும் பார்க்கும் போது அவர் எடிட் செய்தது என்ற தகவல் உண்மை என்று கூறியது தெளிவாகிறது. 14 நிமிட வீடியோவின் சில விநாடிகளை மட்டும் எடுத்து சங்ககிரி ராஜ்குமார் பல்டி அடித்துவிட்டார் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:பிரபாகரன் படம் விவகாரம்: பல்டியடித்தாரா சங்ககிரி ராஜ்குமார்?

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading