
வெறி பிடிக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேன் என்று எச்.ராஜா ட்வீட் பதிவு வெளியிட்டதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
எச்.ராஜா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்துடன் கூடிய எச்.ராஜா வெளியிட்ட ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெறி பிடிக்காமல் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக்கொண்டேன்” என்று இருந்தது. இந்த பதிவை சொம்புதூக்கி டவுசர்பாய்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 மார்ச் 9 அன்று பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
எச்.ராஜா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தையும் அவர் ஷேர் செய்திருந்தார். இந்த நிலையில் விஷமத் தனமான தகவலை சேர்த்து அவர் ட்வீட் வெளியிட்டது போல பலரும் ஷேர் செய்து வருகின்றனர். பார்க்கும் போதே போலியானது என்று தெரிகிறது. பலரும் இதை ஷேர் செய்து வரவே இது பற்றி ஆய்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தோம். அப்போது 2021 மார்ச் 9 அன்று இதே புகைப்படத்துடன் கூடிய பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில், “இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்” என்று இருந்தது. இந்த பதிவைத்தான் எடுத்து மாற்றியிருக்கிறார்கள் என்பது உறுதியானது.
இது தொடர்பாக எச்.ராஜா தரப்பின் கருத்தை அறிந்துகொள்ள அவரது மருமகன் சூர்யா ராமதாஸைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் இது போலியானது என்பதை உறுதி செய்தார்.
இதன் அடிப்படையில் எச்.ராஜா பற்றி பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசி போட்டேன் என்று எச்.ராஜா ட்வீட் வெளியிட்டதாக பரவும் படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசி போட்டேன் என்று எச்.ராஜா கூறியதாக பரவும் போலி ட்வீட்!
Fact Check By: Chendur PandianResult: False
