
கொரோனா நிவாரண நிதியாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் ரூ.180 கோடியும், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ரூ.20 கோடியும் வழங்கியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived link |
பிரதமர் மோடி, இந்தி நடிகர் அக்ஷய் குமார், கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோரின் படத்தைக் கொண்டு பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், “பாரத பிரதமர் திரு.மோடி ஜி அவர்களிடம் கொரோனா நிவாரணி நிதி…! ரூ.180 கோடி வழங்கிய இந்தி நடிகர் அக்ஷய் குமார். ரூ.20 கோடி வழங்கிய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, Kalavathi Kala என்பவர் 2020 மார்ச் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், “கொடுப்பதற்கும் மனசு வேணும்… நல்ல மனுஷனுக்குத் தான் நல்ல மனுசு இருக்கும்.!” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கொரோனா பாதிப்புக்காக திரை, விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் நிவாரண நிதி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்தி நடிகர்கள் வழங்கினார், தமிழ் நடிகர்கள் இன்னும் வழங்கவில்லை என்று பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அக்ஷய் குமார் ரூ.180 கோடி வழங்கினாரா என்றும் கிரிக்கெட் வீரர் தோனி ரூ.20 கோடி வழங்கினாரா என்றும் ஆய்வு செய்தோம்.
முதலில் அக்ஷய் குமார் பற்றி தேடினோம். கூகுளில் கொரோனாவுக்கு நிதி உதவி வழங்கிய அக்ஷய் குமார் என்று டைப் செய்து தேடினோம். கொரோனா தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் கிடைத்தன. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அவர் நிதி உதவி அறிவித்ததாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
Search Link | Archived Link |
அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஏதும் உள்ளதா என்று ஆய்வு செய்தோம். அதிலும் அவர் அட்வைஸ் செய்த வீடியோ இருந்தது, ஆனால் பணம் கொடுத்ததாக எந்த ஒரு செய்தியையும் அவர் வெளியிடவில்லை.
நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மராத்தியில் அக்ஷய் குமார் ரூ.180 கோடி நிதி உதவி அறிவித்தாரா என்று கட்டுரை வெளியிட்டிருந்தனர். அதிலும், இந்த தகவல் தவறானது என்று தெரிவித்திருந்தனர்.
marathi.factcrescendo.com |
அடுத்ததாக எம்.எஸ்.தோனி நிதி உதவி செய்தாரா என்று ஆய்வு செய்தோம். சச்சின் டெண்டுல்கர், கங்குலி உள்ளிட்டவர்கள் நிதி உதவி தொடர்பான செய்திகள் கிடைத்தன. தோனி பற்றி ஒரே ஒரு செய்திதான் கிடைத்தது. அதுவும் புனேவில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அவர் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கியதாக குறிப்பிட்டிருந்தனர்.
தோனி மிகக் குறைவாக வழங்கிவிட்டார் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்த நிலையில் மோடியின் மனைவி சாக்ஷி ஊடகங்கள் உண்மை அறிந்து செய்தியை வெளியிட வேண்டும் என்று காட்டமாக ட்வீட் செய்திருந்தது தெரிந்தது.

economictimes | Archived Link 1 |
hindustantimes.com | Archived Link 2 |
அக்ஷய் குமார், தோனி இருவரும் எதிர்காலத்தில் நிதி உதவி வழங்கலாம், பதிவில் குறிப்பிட்ட அளவு கூட கொடுக்கலாம், ஆனால் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிட்ட நேரத்தில், நாம் ஆய்வு செய்த நேரம் வரை அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் அவர்கள் இருவரும் வெளியிடவில்லை.
ஆனால், மார்ச் 28, 2020 மாலை அக்ஷய் குமார் பிரதமரின் கொரோனா வைரஸ் நிவாரண பணிக்காக, ரூ.25 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். நாம் கட்டுரையை எழுதி முடிக்கும்போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனையும் இங்கே ஆதாரத்திற்காக சேர்த்துள்ளோம்.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கொரோனா வைரஸ்: அக்ஷய் குமார், தோனி நிதி உதவி செய்தார்களா?
Fact Check By: Chendur PandianResult:Partly False
