
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 புகழ் லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Article Link I Archived Link 2
லாஸ்லியா விவாகரத்தானவரா? பிக்பாஸில் அதை மறைக்கிறாரா? என்று ஒரு செய்தி லிங்க் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், லாஸ்லியா திருமணக் கோலத்தில் இருக்கும் படம் உள்ளது.
இந்த செய்தியை Asiaville Tamil என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் ஜூலை 7ம் தேதி வெளியிட்டுள்ளனர். லாஸ்லியா திருமண புகைப்படம் மற்றும் தகவலை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியது. இதில், இலங்கையை சேர்ந்த பெண் லாஸ்லியாவுக்கு ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. இந்தநிலையில், லாஸ்லியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால், லாஸ்லியா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த சமூக ஊடக பதிவை அடிப்படையாகக் கொண்டு, tamil.asiavillenews.com லாஸ்லியா திருமண படம் உண்மை என்பது போல செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், லாஸ்லியா சொன்னால் மட்டுமே எது உண்மை, எது பொய் என்று தெரியும் என்று ‘மையமாக’ குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிடடது என்று தகவல் உலா வருகிறது. சொந்த வாழ்க்கையை இத்தனை கேமராக்கள் முன்பு கூற வேண்டும் என்று நாம் நினைப்பது தவறு என்று அது உண்மை என்பது போல குறப்பிட்டுள்ளனர்.

அவர்கள் பகிர்ந்துள்ள படத்தை ஆய்வு செய்தோம். அது மார்ஃபிங் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. லாஸ்லியா திருமணக் கோலத்தில் இருக்கும் படத்தில், லாஸ்லியா தலையில் மஞ்சள் கயிறு ஒன்று கட்டப்பட்டிருப்பதை காணலாம். அது நெற்றிப் பகுதியில் அழிக்கப்பட்டு இருந்தது. லாஸ்லியா முகத்தை மார்ஃபிங் செய்து வைத்துள்ளார்கள் என்பது எளிதாகத் தெரிந்தும் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.

படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்ய வேறு ஏதாவது செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, திருமணக் கோலத்தில் வேறு ஒரு பெண் இருக்கும் அசல் படத்தைப் பலரும் பகிர்ந்துள்ளது தெரிந்தது. அந்த செய்தி மற்றும் படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

ட்விட்டரில் லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறிய பெண்ணின் பின்னணியை ஆய்வு செய்தோம். அந்த ஐ.டி அழிக்கப்பட்டு இருந்தது. பலரும், அந்த ஐ.டி பொய்யானது என்று குறிப்பிட்டிருந்தனர்.

லாஸ்லியாவுக்கு திருமணம் ஆனது உண்மையா, அது தொடர்பாக வேறு யாராவது செய்தி வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு செய்தோம். அப்போது, லாஸ்லியாவுக்கு திருமணம் ஆனது என்று சமூக ஊடகத்தில் அவரது தோழி என்று ஒருவர் பதிவிட்டது வெறும் வதந்தி. லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகவில்லை என்று அவரது தோழிகள் உறுதி செய்த செய்தி நமக்குக் கிடைத்தது. லாஸ்லியாவின் தோழியுடன் பேசிய உரையாடல் ஆடியோவையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
நம்முடைய ஆய்வில், லாஸ்லியாவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று வெளியான புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், செய்தியில் பட்டும் படாமலும் தகவல் சேர்த்துள்ளனர். இதன் மூலம், இந்த செய்தி உண்மையும் பொய்யான தகவலும் சேர்ந்தது என்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் தவறான தகவலும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
