குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா?

சமூக ஊடகம் | Social தமிழகம்

‘’குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பு,’’ என பகிரப்படும் வைரல் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். 

தகவலின் விவரம்: 

இதனை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி உண்மை விவரம் கண்டறியும்படி கேட்டிருந்தார். இதே தகவலை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என விவரம் தேடினோம். அப்போது பலரும் இதனை பகிர்வதைக் கண்டோம். 

Facebook Claim Link 1Archived Link
Facebook Claim Link 2Archived Link

இதே செய்தியை பல முன்னணி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. 

FB LinkArchived LinkOneIndia NewsArchived Link

இதன்படி, ‘’மத்திய அரசால் செம்மொழி அந்தஸ்து தரப்பட்ட மொழிகளில் சிறந்து விளங்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவரால் விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கி கவுரவிக்கப்படும். இந்த செம்மொழி பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை,’’ என இந்த செய்தியில் கூறியுள்ளனர். 

உண்மை அறிவோம்:
மேற்கண்ட விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள http://sanskrit.nic.in/ இணையதள முகவரி சென்று பார்வையிட்டோம். அதில், இதுபற்றிய விளம்பர அறிவிக்கை தரப்பட்டிருந்தது. அதில், 2வது பக்கத்தில் செம்மொழி தமிழ்ப்பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால், மற்ற இடம் எங்கேயும் தமிழ் பற்றி குறிப்பிடவில்லை. 

Presidential Award 2020 Notification PDF LinkArchived Link

ஆனால், இதில் ஒரு அடிப்படையான விசயம் உள்ளது. செம்மொழி தமிழாய்வு நிறுவனம், திமுக முயற்சியில் நிறுவப்பட்டதாகும். அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகம் வெளிக்காட்டப்படுவதில்லை. அப்படியான சிக்கல்தான் இதிலும் உள்ளது. 

கடந்த 2004ம் ஆண்டு முதல் முதலாக, இந்தியாவிலேயே தமிழ்தான் செம்மொழி அந்தஸ்து பெற்றது. அதன் அடிப்படையில் தமிழ் மொழிக்கென தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அன்று முதலாக, செம்மொழி தமிழ்ப் புலமை விருதுகளை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்தான் அறிவித்து, விண்ணப்பங்களை 

தேர்வு செய்யும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்குவார்.  

அதேசமயம், மற்ற செம்மொழிகளுக்கு என்று தன்னாட்சி அங்கீகாரம் எதுவும் தரப்படவில்லை. அதனால்தான், அந்த மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு மத்திய அரசே நேரடியாக விண்ணப்பங்களை வரவேற்று குடியரசுத் தலைவர் மூலமாக விருது வழங்குகிறது. இதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். 

இதனால்தான், மேற்கண்ட விளம்பர அறிவிக்கையில் தமிழ் பற்றி அதிகம் குறிப்பிடவில்லை என, தமிழக அரசு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. 

இந்த பிரச்னை டிரெண்டிங் ஆன நிலையில் இதுபற்றி தமிழ் வளர்ச்சித்துறை ஊடகங்கள் வழியாக தற்போது விளக்கம் அளித்துள்ளது. 

Puthiyathalaimurai LinkArchived Link
Dailythanthi.com Link Archived Link 

அதாவது, தன்னிச்சையாக செயல்படாத செம்மொழிகளில் புலமை பெற்றவர்களுக்குத்தான் இதுபோன்ற விருதுகள், பரிசுத் தொகையை மத்திய அரசு நேரடியாக வழங்கி வருகிறது. ஆனால், தமிழ் மொழிக்கென தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற செம்மொழி ஆய்வு நிறுவனம் மத்திய அரசின்கீழ் செயல்படுகிறது. அந்த அமைப்புதான் செம்மொழித் தமிழ் தொடர்பான ஆய்வுகள், விருதுகள் உள்ளிட்டவற்றை இறுதி செய்யக்கூடியதாகும். 

தமிழ் தவிர்த்து மற்ற செம்மொழிகளுக்கு கடந்த 2017 முதலாகத்தான் குடியரசுத் தலைவர் விருதுகள் தரப்படுகின்றன. ஆனால், செம்மொழி தமிழ் புலமை பெற்றவர்களுக்கு அதற்கு முன்பிருந்தே 2005 முதலாக, விருதுகள் குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விருது பெறுவோரை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வசம் உள்ளது.  

எனவேதான், ஆண்டுதோறும் செம்மொழி தமிழ் தவிர மற்ற செம்மொழிகளுக்கு மட்டும் குடியரசுத் தலைவர் விருதுகள் ஒன்றாக அறிவிக்கப்படுகின்றன. மறுபுறம், தமிழுக்கு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் விருது விண்ணப்பங்கள் பிரத்யேகமாக வரவேற்கப்படுகின்றன. 

இந்த புரிதல் இன்றி ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவரின் செம்மொழிகளுக்கான விருது அறிவிப்பு வெளியானதும், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகக் கூறி சிலர் கண்டனம் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

ஏற்கனவே, 2018ம் ஆண்டில் இப்படியான சர்ச்சை ஏற்பட்டதையும், அப்போதே மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கம் அளித்ததையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

Viduthalai News LinkArchived Link
Hindutamil News LinkArchived Link
Patrikai.com LinkArchived Link

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம், 

1) செம்மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது மற்றும் பரிசுத் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதில், தமிழ் தொடர்பான விருது நடவடிக்கைகள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் பிரத்யேகமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், மற்ற தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு விருது வழங்குவதை மத்திய அரசே நேரடியாக செய்கிறது. 

2) அதாவது, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றதாகும். அது பரிந்துரை செய்யும் நபர்களுக்கு குடியரசுத் தலைவர் கையால், தொல்காப்பியர் விருது, குறள் பீட விருது, இளம் அறிஞர் விருது போன்றவை வழங்கப்படும். தன்னாட்சி அங்கீகாரம் இல்லாத தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா போன்ற செம்மொழிகளுக்குத்தான் மத்திய அரசே நேரடியாக விருது விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

3) எனவே, செம்மொழிகளுக்கான குடியரசுத் தலைவர் விருது பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாகச் சொல்வது தவறாகும். 

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் செய்திகளில் முழு உண்மை இல்லை என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை காண நேரிட்டால், அவற்றை எமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி வையுங்கள்.

Avatar

Title:குடியரசுத் தலைவர் விருது 2020 விண்ணப்ப பட்டியலில் தமிழ் மொழி புறக்கணிப்பா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Partly False