
‘’டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ம் ஆண்டில் அச்சிடப்பட்டது,’’ என்று கூறி ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இதில், ‘’2019ல் தயாரித்த டெட்டால் பாட்டிலில் கொரோனா வைரஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பரவுவது 2020ம் ஆண்டில். இது எப்படி முன்கூட்டியே டெட்டால் தயாரிப்பவருக்கு தெரியும்? இது கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பப்படும் நோய்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் கூறுவதில் முழு உண்மையில்லை. காரணம், இதற்கு முன்பும் கொரோனா வைரஸ் உலக அளவில் மருத்துவ நிபுணர்களால் முன்னெச்சரிக்கை உடன் கையாளப்பட்டு வருகிறது. ஆனால், அந்த கொரோனா வைரஸ் வேறு, தற்போது உலக நாடுகளை பாதித்து வருவது கொரோனா வகையை சேர்ந்த COVID 19 ரக வைரஸாகும். இது தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வகையில் பல வகைகள் உள்ளன. இவை ஏற்கனவே மருத்துவ உலகிற்கு பரிச்சயமானவைதான். ஆனால், நாம் தற்போது பயப்படுவது கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த COVID 19 வைரஸ் ஆகும். இந்த வேறுபாட்டை தெளிவாக புரிந்துகொள்வது நலம். 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து இது சீனாவில் தோன்றி படிப்படியாக உலகம் முழுக்க பரவ தொடங்கியுள்ளது. அதனால்தான் இந்த வைரஸ்க்கு COVID 19 எனப் பெயரிடப்பட்டுள்ளது. சிலர் இதனை Novel Coronavirus (nCoV2019) என்றும் அழைப்பார்கள்.
இதுபற்றி தெளிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர டெட்டால் மருந்தால் தற்போது பரவி வரும் COVID 19 ரக வைரஸை அழிக்க முடியாது. அவர்கள் குறிப்பிடுவது இதற்கு முந்தைய கொரோனா வைரஸ் மட்டுமே. தற்போது பரவிவருவது முந்தைய கொரோனாவை விட மிகவும் ஆபத்தானதாகும்.
டெட்டால் தயாரிப்பாளர் கூட இதுபற்றி ஏற்கனவே மறுப்பு வெளியிட்டுள்ளனர்.
Livemint Link | Archived Link |
எனவே, டெட்டால் பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ், இதற்கு முன்பே கண்டறியப்பட்டு மனிதர்களுக்கு தொற்றிவரும் ஒன்றாகும். ஆனால், தற்போது பரவிவரும் வைரஸ் novel Coronavirus (nCoV 2019) அல்லது COVID 19 ஆகும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ் என்பதால் மக்களுக்கு இந்த வேறுபாடு சரியாக புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது. இதனால், டெட்டால் மருந்து பாட்டிலை சுட்டிக்காட்டி சிலர் தவறான தகவலை சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தெளிவாகிறது.
இதுபற்றி மேலும் விரிவாக படிக்க WHO வெளியிட்டுள்ள கட்டுரை லிங்க் கீழே தரப்பட்டுள்ளது. அதனை கிளிக் செய்யவும்.
WHO Link | Archived Link |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) கடந்த 1960ம் ஆண்டு முதலாகவே மனித குலத்தை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. அது வேறு ரகமான வைரஸ். அதைத்தான் டெட்டால் மருந்து பாட்டிலில் குறிப்பிட்டுள்ளனர்.
2) தற்போது பரவிவருவது கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த புது வகை வைரஸ் ஆகும். அதன் பெயர் நாவல் கொரோனா (nCoV 2019) அல்லது COVID 19 ஆகும்.
3) 2019 இறுதியில் இருந்து இந்த புது வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கும் டெட்டால் பாட்டிலில் உள்ளதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுபற்றி டெட்டால் மருந்தை தயாரிக்கும் நிறுவனம் கூட ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உண்மையும், பொய்யும் கலந்து தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டெட்டால் பாட்டில் மீது கொரோனா வைரஸ் பெயர் 2019ல் குறிப்பிடப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: Partly False
