எல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

லடாக்கில் இந்திய எல்லை சுவரை சீன ராணுவ வீரர்கள் உடைப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக் கல் சுவரை எட்டி உதைத்து உடைக்க முயற்சிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அவர்களை இந்திய வீரர்கள் தடுக்கின்றனர். நிலைத் தகவலில், “இந்தியா எல்லை சுவர்களை உடைக்கும் சீன ராணுவம்.. வெறும் கைகளால் தடுத்து கொண்டு இருக்கும் இந்திய ராணுவம்.!! பாகிஸ்தானின் வழக்கமான அத்துமீறலுக்கே மன்மோகன்சிங் கை #புடவை கட்டிக்க சொன்ன மோடிக்கு இப்ப எதை அனுப்பலாம்.!! அண்ணனுக்கு ஒரு பாவாடை பார்ச்சல்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை கார்த்திக் என்பவர் 2020 ஜூன் 1ம் தேதி வெளியிட்டுள்ளார்.

உண்மை அறிவோம்:

இந்தியா – சீனா இடையே லடாக் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இரு தரப்பும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன. இந்தியா – சீனா இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கத் தயார் என்று அமெரிக்க அதிபர் அறிவிக்கும் அளவுக்கு பிரச்னை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய எல்லையில் சுவர்களை உடைக்கும் சீன ராணுவம், வெறும் கைகளால் தடுத்துக்கொண்டிருக்கும் இந்திய ராணுவம் என்று குறிப்பிட்டு பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்று குறிப்பிடவில்லை என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் லடாக் எல்லையில் நடந்தது போன்ற தோற்றத்தினையே இந்த பதிவு உணர்த்துகிறது. எனவே, இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம்.

Search Link

வீடியோ காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். இந்த ஆண்டு ஜனவரி மாதம், 2019, 18, 15 என பல ஆண்டுகளாக இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது. அருணாசலப்பிரதேச எல்லையில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். ஆனால், முதலில் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

Search Link

எனவே, இந்திய எல்லைச் சுவற்றை உடைக்க முயன்ற சீனா என்ற கீ வார்த்தைகளை கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது 2011ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வீடியோ ஒன்று வெளியிட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால், அந்த வீடியோ தற்போது அகற்றப்பட்டு இருந்தது.

அதன் பிறகு, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல செய்தி ஊடகங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்திருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் 2014ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை தற்போதைய எல்லை பிரச்னையுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

இதன் அடிப்படையில் இந்த தகவல் உண்மையானதுதான். ஆனால், தற்போது நிகழ்ந்தது இல்லை, 2014ல் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் வீடியோ உண்மையானது, ஆனால் 2014ல் எடுக்கப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:எல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False