
‘’கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு வைரல் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

Keerthana என்ற ஃபேஸ்புக் ஐடி, மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்துவருகின்றனர். எனவே, இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்தும்படி நமது வாசகர் ஒருவர் இமெயிலில் புகார் அனுப்பியிருந்தார்.
உண்மை அறிவோம்:
இந்த ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தை உற்று கவனித்தால் ஒரு விசயம் புரியும். அந்த படத்தின் இடது மூலையில், கீழ்ப்புறமாக ஒரு புகைப்படக்கலைஞரின் பெயர் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். அதாவது, யாரோ தொழில்முறை ஃபோட்டோஷூட் நடத்தி இதனை வெளியிட்டுள்ளார் என தெரிகிறது.

இதன்படி, மேலே உள்ள புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது, இது ஒரு மலையாள சினிமா படத்தின் ஃபோட்டோஷூட் ஸ்டில்கள் என்ற விவரம் கிடைத்தது.

அதாவது, மோகன்லால், சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான Janakan என்ற படத்தின் ஸ்டில்களில் ஒன்றை எடுத்து, பொறியியல் படித்துவிட்டு, விவசாய தொழிலுக்கு மாறியவர்கள் என்று தவறாகச் சித்தரித்துள்ளனர் என்று தெரியவருகிறது.

இதுதொடர்பாக, CineSpot உள்ளிட்ட பல்வேறு இணையதளங்கள் புகைப்பட கேலரி வெளியிட்டுள்ளனர். அதில் இருந்துதான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள புகைப்படத்தை எடுத்தவரின் பெயர் மகாதேவன் தம்பி. இதனை கீழே உள்ள ஆதார புகைப்படத்தில் நீங்கள் தெளிவாக பார்க்க முடியும். கேரளா சினிமாவில் மகாதேவன் தம்பி பிரபலமான புகைப்படக் கலைஞர் ஆவார்.

எனவே, லைக் வாங்குவதற்காக தவறான தகவலை பரப்பியவர்கள், அதில் உள்ள கொண்டையை மறைக்க மறந்துவிட்டார்கள். மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல இவர்கள் பொறியியல் படித்த விவசாயிகள் அல்ல, சினிமா நடிகர்கள் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கேரளாவில் விவசாயிகளாக மாறிய பொறியியல் படித்த மாணவர்கள்: ஃபேஸ்புக் வதந்தி
Fact Check By: Parthiban SResult: False
