
‘’காஷ்மீர் லால் சவுக்கில் சுதந்திர தினத்தன்று இந்திய தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இதில், இரு வேறு கொடிகள் பறப்பது போன்ற புகைப்படங்கள் இரண்டை இணைத்து, அதன் மேலே, ‘’ மோடி ஆட்சிக்கு முன் நமது காஷ்மிரில் பாக்கிஸ்தான் கொடி மோடி ஆட்சிக்கு பின் நமது காஷ்மீரில் நமது இந்திய தேசிய கொடி. நெஞ்சை நிமிர்த்தி சொல்வேன் நான் இந்தியன் என,’’ என்று எழுதியுள்ளனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இவர்கள் குறிப்பிடும் இடம் காஷ்மீரில் உள்ள லால் சவுக்தானா என விவரம் தேடினோம். அப்போது, இதன் பெயர் Lal Chowk Clock Tower என்றும், ஸ்ரீநகரில் (காஷ்மீர்) உள்ளதென்றும் விவரம் தெரியவந்தது.

இதற்கடுத்தப்படியாக, இந்த கட்டிடத்தின் மீது என்றேனும் பாகிஸ்தான் கொடி பறக்க விடப்பட்டதா தகவல் தேடினோம். இதன்படி, 1992ம் ஆண்டில் அங்கே பாஜக சார்பாக, தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, தீவிரவாதக் குழுக்கள் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அன்றில் இருந்து, குறிப்பிட்ட கட்டிடத்தில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவது பெரும் போராட்டத்திற்குரிய விசயமாக மாறிவிட்டது. அத்துடன், சில பிரிவினைவாதக் குழுக்கள் அந்த கட்டிடத்தின் மீது பாகிஸ்தான் கொடியை ஏற்றி போராடுவதையும் வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
Lal Chowk Controversy I Voice Of Karachi Blog Link
இந்நிலையில்தான், கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த மாநில அந்தஸ்தை விலக்கிக் கொண்டு, யூனியன் பிரதேச நிலைக்கு மாற்றுவதாக, மத்திய அரசு அறிவித்தது. ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதியை யூனியன் பிரதேசமாக திருத்தியமைத்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Jammu Kashmir Reorganisation Act 2019
இதையொட்டி, காஷ்மீரில் சுதந்திரக் குரல் நசுக்கப்பட்டு, இந்திய அரசு அடக்குமுறை செய்வதாக, எதிர்க்கட்சிகளும், இந்திய அரசின் வெற்றி நிலைநாட்டப்பட்டுவிட்டதாக, பாஜகவினரும் தகவல் பகிர்வது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு பகிரப்படும் தகவல்களில் ஒன்றுதான் மேலே நாம் கண்ட புகைப்படமும். உண்மையில், அதில் உள்ளதுபோல லால் சவுக் வாட்ச் டவர் மீது ஆகஸ்ட் 15, 2020 அன்று இந்திய தேசியக் கொடி எதுவும் ஏற்றப்படவில்லை.
அன்றைய தினம், லால் சவுக் பகுதி ஆள் நடமாட்டம் ஏதும் இன்றி காணப்பட்டது. இதுபற்றி, காஷ்மீர் ஊடகம் ஒன்று வெளியிட்ட வீடியோ காட்சியை ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.
மேலும், இவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் உள்ள பாகிஸ்தான் கொடி ஏற்றும் காட்சி ஏற்கனவே நிகழ்ந்த ஒரு போராட்டம் தொடர்பானதாகும். அதேசமயம், இந்திய தேசியக் கொடி பறக்கும் காட்சி எடிட் செய்யப்பட்டதாகும்.

இதன் அசல் புகைப்படம் ஏற்கனவே நமக்கு கிடைத்துள்ளது. அதனை ஒப்பிட்டு வாசகர்களுக்காக, கீழே இணைத்துள்ளோம்.

எனவே, ஆகஸ்ட் 15, 2020 அன்று குறிப்பிட்ட லால் சவுக் பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டிருக்கிறது. அங்கே இந்திய தேசியக் கொடி எதுவும் பறக்கவிடப்படவில்லை என்பது சந்தேகமின்றி தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் எடிட் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர் என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Title:காஷ்மீர் லால் சவுக்கில் இந்திய தேசியக் கொடி பறந்ததாகப் பகிரப்படும் வதந்தி!
Fact Check By: Pankaj IyerResult: False
