
‘’நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் மார்வாடி சமூகத்தைச் சேர்ந்தவர்,‘’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
Velmurugan Balasubramanian என்பவர் டிசம்பர் 27, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நாம் தமிழர் கட்சியின் கும்பகோணம் பகுதி ஒன்றிய செயலாளராக இருப்பவர் பூபேஷ் குப்தா. இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக, அப்பகுதியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதாக, கட்சி தரப்பில் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பை பயன்படுத்தித்தான் மேற்கண்ட வதந்திகள் ஃபேஸ்புக்கில் பகிரப்படுகின்றன.
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாள நண்பர்களிடம் விவரம் கேட்டோம். அப்போது அவர்கள், உண்மையில், பூபேஷ் குப்தா, பூர்வீகமாகவே தமிழர்தான் என தெரிவித்தனர்.

மேலும், ‘’பூபேஷ் குப்தாவின் தந்தை ஏ.ஏம்.ராமலிங்கம் கும்பகோணம் பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆவார். அவர் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தாவின் பெயரை தனது மகனுக்கு சூட்டியிருக்கிறார். இதுதான் அவரது பெயருக்குக் காரணம். இதுபோல, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் அல்லது அரசியல்வாதிகளின் பெயரை பலரும் தங்களது குழந்தைக்கு சூட்டுவது தமிழகத்தில் வழக்கம்தான். உதாரணமாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அவரது தந்தை கருணாநிதி ரஷ்ய தலைவர் ஸ்டாலின் மேல் உள்ள ஈர்ப்பால் அந்த பெயரை சூட்டினார். காந்தி, நேரு, காமராஜ், பிரபாகரன் என்ற பெயரில் தமிழகத்தில் நிறைய பேரை பார்க்க முடியும். கருணாநிதி என்ற பெயரை திமுக தொண்டர்கள் தமது குழந்தைகளுக்கு வைத்து மகிழ்வது வழக்கம்தான். இப்படி நிறைய சொல்லலாம். வெறும் பெயரை மட்டும் வைத்து ஒருவரின் பூர்வீகத்தை எடை போட்டு விட முடியாது. அவரது புகைப்படத்தைக் கூட காட்டாமல் மார்வாடிக்கு நாம் தமிழர் கட்சி வாய்ப்பு அளித்ததாகக் கூறி தவறான தகவல் பரப்பி வருகின்றனர். இதில் உண்மையில்லை,’’ என்றும் நம்மிடம் பேசிய தஞ்சை பகுதி நிர்வாகிகள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் குறிப்பிட்டனர்.
இதுபற்றி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் ஃபேஸ்புக்கில் விளக்கம் தெரிவித்து, தகவல் பகிர்ந்துள்ளனர். அவற்றில் சிலவற்றின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
Facebook Link 1 | Facebook Link 2 | Facebook Link 3 |
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பூபேஷ் குப்தா எனும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி தமிழர்தான்; அவரது பெயர் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மீதுள்ள ஈர்ப்பால் சூட்டப்பட்ட ஒன்று என்றும் தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மார்வாடி சமூகத்தவரா?- பெயரால் வந்த குழப்பம்!
Fact Check By: Pankaj IyerResult: False
