
‘’பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கு மோடி செய்த சதிதான் காரணம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா அல்லது வேண்டுமென்றே குசும்புத்தனம் உள்ளவர்கள் செய்த விஷமத்தனமா என்ற நோக்கில் ஆய்வு செய்தோம்.
வதந்தியின் விவரம்:
…. பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் …
__________________________________
கீழே உள்ள படத்தில் இருப்பது காற்றாலை போல காட்சி தரலாம் ஆனால் இவை மிக வேகமாக சுழலக்கூட்டிய ராட்சத இஞ்சின்களை கொண்ட காற்றாடிகள் ..
இவை மோடி ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகத்தின் கடற்கரை நகரங்களான தொண்டி , மணமேல்குடி ஆகிய நகரங்களிலிருந்து 10 கிமி தொலைவில் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி அதன் மேல் அமைக்கப்பட்டது .
இவை வலப்புறமாக சுழலும்போது காற்றை வெளிதள்ளும்படியும் எதிர்திசையில் சுழலும் போது காற்றை உள்வாங்கி , தமிழ்நாட்டுக்குள் அனுப்பும்படியும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது .
தமிழகத்தை கஜா புயல் தாக்க வாய்ப்பேயில்லை என்று வானிலை ஆய்வாளர்கள் சொன்ன நிலையில் தமிழர்களை அழிப்பதையே குறிக்கோளாக கொண்ட மோடி , இதனை எதிர்த்திசையில் அதிவேகமாக சுழலசெய்து, கேரளம் நோக்கி சென்ற காற்றை தமிழகத்திற்கு திருப்பி விட இந்த கருவிகளை வடிவமைத்த ISRO விஞ்ஞானிகளுக்கு கட்டளையிட்டார் . அவரது திட்டப்படி புயல்காற்று திசை மாறி தமிழகத்தை வாட்டியெடுத்தது .
இன்று குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடும் நிலையில் , தமிழ்நாட்டில் புயலோ மழையோ வந்து தமிழ்நாட்டை வளப்படுத்திவிட கூடாது என்ற எண்ணத்தில் இந்த கருவிகளை நேர்வாக்கில் சுழலசெய்து இப்பொழுது ஒரிஸ்ஸா வின் கடற்பகுதி யை நோக்கி திரும்பி போகும்படி திசைமாற்றி
விட்டிருக்கிறார் பாசிச மோடி .
இப்பொழுது புரிகிறதா பானி புயல் ஏன் தமிழகத்திற்குள் வரவில்லையென்று???????
தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும் …….
Archived Link
Students Against Corruption 2.0 என்ற ஃபேஸ்புக் குழு, மே 1ம் தேதியன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை வெளியிட்ட ஃபேஸ்புக் குழு, அப்துல் கலாம் புரொஃபைல் பிக்சர் வைத்திருந்தாலும், இப்படியான ஒரு மூளையற்ற பதிவை வெளியிட்டது மிகவும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது. இப்படியெல்லாம் ஒரு நாட்டின் பிரதமர் அபத்தமாகச் செயல்படுவாரா என்று கூட உணராமல் எப்படி இவர்கள் இப்படி ஒரு பதிவை வெளியிட்டனர் என வருத்தமே மிஞ்சியது. இதன்படி, வேறு யாரெல்லாம் ஃபேஸ்புக்கில் இத்தகைய தகவலை பகிர்ந்துள்ளனர் என்று தேடினால், பல பேர் இவ்வாறு செய்துள்ள விவரம் கிடைத்தது.

முதலில், இவர்கள் குறிப்பிட்டுள்ள புகைப்படங்கள் உண்மையா என பரிசோதித்து பார்த்தோம். இதன்படி, கூகுள் மற்றும் Yandex உதவியுடன் இதில் உள்ள காற்றாலை புகைப்படம் மற்றும் மேப் ஆகியவற்றை ஆய்வு செய்தோம். அதில், காற்றாலை புகைப்படம் பலரும் செய்தி வெளியிடுவதற்காக பயன்படுத்தும் ஒரு முன் உதாரணப் படம் என்று தெரியவந்தது.

மேற்கத்திய மற்றும் கிழக்காசிய நாடுகள்தான் இத்தகைய கடலில் இயங்கும் காற்றாலைகளை நிறுவியுள்ளன என்றும், தமிழகத்தில் இத்தகைய நடுக்கடலில் இயங்கும் காற்றாலை எதுவும் இல்லை என்றும் விவரம் கிடைத்தது. இதுபற்றி விக்கிப்பீடியா தமிழ் வெளியிட்டுள்ள கட்டுரை விவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இவர்கள் பகிர்ந்துள்ள, தொண்டி, மணமேல்குடி பற்றிய கூகுள் வரைபடம் உண்மைதான். ஆனால், அங்கு எந்த செயற்கை தீவுகளையும் மத்திய அரசோ, மோடியோ உருவாக்கவில்லை.
இதுபற்றி மேலும் ஒருமுறை விரிவாக கூகுளில் தேடியபோது, இதேபோன்ற ஃபேஸ்புக் பதிவு ஒன்றின் விவரம் கிடைத்தது. அந்த ஃபேஸ்புக் பதிவை பின்தொடர்ந்து சென்று, ஆய்வு செய்ததில், இத்தகைய விஷமத்தனமான, வேண்டுமென்றே தவறான செய்திகளை மக்கள் மனதில் உண்மை என நம்ப வைப்பதற்காக, சிலர் ஃபேஸ்புக்கில் ஐடி நடத்தி வருவதாக, தெரியவந்தது. அப்படி சிலரால் பகிரப்பட்ட இந்த தகவல் ஒருகட்டத்தில், உண்மைபோல ஃபேஸ்புக்கில் வலம் வர தொடங்கியுள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

Archived Link
அதாவது, தங்களின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காகவும், பொழுது போக்கிற்காகவும், தின்ற சோறு செரிப்பதற்காகவும் ஒரு ஃபேஸ்புக் ஐடி தொடங்கி, அதில் முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை வெளியிடும் பழக்கம் நம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இது வேடிக்கையாக தெரிந்தாலும், போகப் போக, தேசநலன், சமூக நலன் சார்ந்த விசயங்களில், உண்மையை திரித்து பரப்புவதை இவர்கள் ஒரு வேலையாகவே செய்ய தொடங்கிவிடுகிறார்கள். இதன்மூலமாக, ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதற்கு, இவர்கள் வழி ஏற்படுத்தித் தருகிறார்கள் என்பதே யதார்த்தம்.
இத்தகைய வதந்தி பரப்புவதில், திமுக, அஇஅதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்கள், தங்களுக்கென பிரத்யேக நெட்வொர்க் ஏற்படுத்தியும் செயல்படுவது வேதனையாக உள்ளது. இதன்படி, திமுக ஆதரவு ஃபேஸ்புக் ஐடி ஒரு சித்தரிக்கப்பட்ட தகவலை வெளியிட்டால், அந்த நெட்வொர்க் சார்ந்தவர்கள் அதை அப்படியே உண்மை போல, மற்றவர்களுக்கும் பகிர்கிறார்கள். இது அனைத்து அரசியல் கட்சி ஆதரவாளர்களுக்கும் பொருந்தும். சிலர் பொழுதுபோக்கிற்காக, தனது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு, இதேபோலச் செய்கிறார்கள். முன்பெல்லாம் குட்டிச்சுவரில் அமர்ந்தபடி, வாய்க்கு வந்ததை பேசியவர்கள், இப்போது ஃபேஸ்புக்கில் ஐடி தொடங்கி, மனம் போன போக்கில் வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதற்கு, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு ஒரு சிறந்த உதாரணம்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக கொண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான அதேசமயம் விஷமத்தனமான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிரும்பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்தால், உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:பானி புயல் தமிழகத்திற்கு வராமல் போனதற்கான காரணம் மோடியா?
Fact Check By: Parthiban SResult: False
