உத்தரப் பிரதேசத்தில் ரூ.500 வாங்கிக்கொண்டு கல் வீசிய முதியவர்?
ரூ.500 வாங்கிக்கொண்டு கலவரத்தில் கல்வீசச் சென்ற முதியவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து உ.பி போலீசார் நோட்டீஸ் அனுப்பியதாக ஒரு படம் ஃபேஸ்புக்கில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
இஸ்லாமிய முதியவர் ஒருவர் கல் வீசும் புகைப்படம் உள்ளது. அதின் மேல் பகுதியில், "மாமா 500 ரூபாய் வாங்கிக்கொண்டு கல் வீச சென்றார். உத்தரப்பிரதேச போலீசார் ரூ.1,50,00 மதிப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, For BJP Tamil Nadu என்ற ஃபேஸ்புக் பக்கம் டிசம்பர் 25, 2019 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், பல தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடந்த போராட்டம் என்று குறிப்பிடவில்லை. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், உ.பி-யில்தான் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை, அபராதம் போன்ற தண்டனைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த படம் உத்தரப்பிரதேசத்தில், தற்போது நடந்து வரும் போராட்டங்களில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
Search Link |
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2016ல் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த கலவரம் தொடர்பான செய்திகள் கிடைத்தன. 2016ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி வெளியான ஒரு செய்தியில் இந்த படத்தைப் பயன்படுத்தியிருந்தனர். ஒரு காலத்தில் மேற்கு வங்கம் இவர்களால் புகழ் பெற்றது. தற்போது இதுபோன்ற செயல்களால் புகழ் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர். அந்த செய்தி நடுநிலையானது போல இல்லை. ஆனால், 2016ம் ஆண்டு இந்த படம் மேற்கு வங்கத்தில் எடுக்கப்பட்டது உறுதி செய்யும் ஆதாரமாக இதை எடுத்துக்கொண்டோம்.
Archived Link 1 | kamengshambhala.wordpress.com | Archived Link 2 |
முழு படம் கிடைக்கிறதா என்று தேடியபோது, ட்விட்டர் ஒன்றில் இந்த படத்தைப் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதுவும் 2016ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து பல பதிவுகளில் இந்த படம் பயன்படுத்தப்பட்டு வந்ததை காண முடிந்தது.
மால்டா கலவரம் பற்றித் தேடினோம். அதில் இந்து மகாசபா தலைவர் கமலேஷ் திவாரி என்பவர் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றி தவறாக பேசியதால் மேற்கு வங்கம் மால்டாவில் ஜனவரி 3ம் தேதி இந்த கலவரம் வெடித்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
நம்முடைய ஆய்வில், 2016ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த கலவரத்தின்போது இந்த படம் எடுக்கப்பட்டது என்று பதிவிடப்பட்ட செய்தி கிடைத்துள்ளது.
2016ம் ஆண்டு முதல் இந்த படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதைக் காண முடிந்தது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் கல் வீசச் சென்ற முதியவருக்கு ரூ.1.5 லட்சம் போலீஸ் அபராதம் விதித்தது என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:உத்தரப் பிரதேசத்தில் ரூ.500 வாங்கிக்கொண்டு கல் வீசிய முதியவர்?
Fact Check By: Chendur PandianResult: False