
சிங்கக் குட்டி ஒன்றை யானை சுமந்து செல்லும் புகைப்படம் இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாக தேர்வு செய்யப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
சிங்கக் குட்டி ஒன்றை யானை தன் துதிக்கையால் சுமந்து செல்வது போன்ற படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஆண்டின் மிகச்சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்ட புகைப்படம் இது. தனது குட்டியுடன் கடும் வெயிலில் காட்டை கடக்க முயன்று களைப்படைந்த சிங்கத்தைக் கண்ட இந்த யானை தனது துதிக்கையைத் தாழ்த்தி அந்த சிங்கக் குட்டியைத் தனது துதிக்கையில் ஏற்றிக்கொண்டு தாய் சிங்கத்துடன் காட்டை கடந்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை சிரிப்பு மருந்து என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் அலைஓசை அலைஓசை என்ற ஐடி கொண்ட நபர் 2021 ஜனவரி 23ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
“ஆண்டின் மிகச்சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எந்த ஆண்டில் என்று குறிப்பிடவில்லை. சிங்கத்தைப் பார்த்தால் களைப்படைந்தது போல தெரியவில்லை. மேலும், மனிதர்களைப் போல ஊர் விட்டு ஊர் சிங்கங்கள் செல்வது இல்லை. எனவே, இந்த படம் உண்மையா, எந்த ஆண்டு, எந்த அமைப்பு இந்த படத்தை சிறந்த படமாக அறிவித்தது என்று ஆய்வு செய்தோம்.
சிங்கக் குட்டியை சுமந்து சென்ற யானை என்று டைப் செய்து தேடியபோது 2018 ஏப்ரல் 3ம் தேதி பிசினஸ் இன்சைடர் என்ற ஊடகம் வெளியிட்ட செய்தி உள்ளிட்ட பல தகவல் நமக்கு கிடைத்தது. அதில், 2018ம் ஆண்டு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தையொட்டி, தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவின் க்ரூகர் சைட்டிங்ஸ் என்ற இணையதளம் மக்களை முட்டாள் ஆக்க செய்த போட்டோஷாப் படம் கோடிக்கணக்கான மக்களை முட்டாள்கள் ஆக்கியது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: businessinsider.co.za I Archive
அந்த செய்தியைப் பார்த்தோம். அதில், “க்ரூகர் தேசிய பூங்கா தொடர்பான தகவல்கள், நேரடி ஆன்லைன் காட்சிகளை வழங்கும் க்ரூகர் சைட்டிங்ஸ் தளம் கடந்த ஏப்ரல் 1 (2018) அன்று சிங்கக் குட்டியை யானை சுமந்து செல்லும் படத்தை வெளியிட்டிருந்தது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இந்த பதிவு வெளியானது. இரண்டே நாளில் கிட்டத்தட்ட 2 கோடி பேர் இந்த புகைப்படத்தை ஷேர் செய்திருந்தனர்.
க்ரூகர் தேசிய பூங்கா நிர்வாகி இது குறித்து கூறுகையில், “ஏப்ரல் 1ம் தேதி இந்த பதிவு வெளியானதும் தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, கென்யா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, இந்தியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முன்னணி ஊடகமான டெலிகிராஃப், மைக்ரோ சாஃப்டின் எம்.எஸ்.என் உள்ளிட்ட ஊடகங்கள் இந்த புகைப்படத்தின் காப்பி ரைட் உரிமை கேட்டு அணுகின. அவர்களிடம் இந்த புகைப்படம் வெறும் போட்டோஷாப் என்று கூறினோம்” என்று இருந்தது.
அசல் பதிவைக் காண: latestsightings.comI Archive
க்ரூகர் பூங்காவின் latestsightings.com தளம் மக்களை முட்டாள் ஆக்கியது எப்படி என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு நேரம், கதை, தரமான முறையில் போட்டோ ஷாப் செய்யப்பட்ட படம், கமெண்ட் செய்தது ஆகியவையே இந்த புகைப்படம் கோடிக்கணக்கான மக்களை நம்பவைக்கக் காரணமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் ஏப்ரல் ஃபூல் (April Fool’s) என்பதை தலைகீழாக Sloof Lirpa என்று குறிப்பிட்டிருந்தோம் என்றும் அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர்.
அசல் பதிவைக் காண: twitter.com I Archive
நம்முடைய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் உள்ள மற்ற முடிவுகளைப் பார்த்தபோது யானை மட்டும் தனியாக இருக்கும் புகைப்படம் 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு இருந்தே இணையதளத்தில் இருப்பதும் கிடைத்தது. அதுபற்றி தொடர்ந்து தேடியபோது 2011ம் ஆண்டு இணையதளத்தில் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. தொடர்ந்து சிங்கம், சிங்கக் குட்டி படங்களைத் தேடினோம். அவைத் தனித்தனியாக எடுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
அசல் பதிவைக் காண: all-informationz.blogspot.com I Archive 1 I blog.londolozi.com I Archive 2 I brewminate.com I Archive 3
நம்முடைய ஆய்வில், சிங்கக் குட்டியை யானை சுமந்து செல்லும் படம் போட்டோஷாப் முறையில் உருவாக்கப்பட்டது என்றும் மக்களை முட்டாள்கள் தினத்தன்று ஏமாற்றும் நோக்கத்தில் அதை வெளியிட்டதாகவும் தென்னாப்பிரிக்க இணையதளம் தெரிவித்துள்ளது.
போட்டோஷாப் முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட யானை, சிங்கம், சிங்கக் குட்டியின் அசல் படங்கள் நமக்கு கிடைத்துள்ளன.
இதன் அடிப்படையில் இந்த ஆண்டின் சிறந்த புகைப்படமாக சிங்கக் குட்டியை யானை சுமந்து செல்லும் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
சிங்கக் குட்டியை யானை சுமந்து சென்றதாக பகிரப்படும் படம் போட்டோ ஷாப் முறையில் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சிங்கக் குட்டியை சுமந்து செல்லும் யானை… இந்த ஆண்டின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டதா?
Fact Check By: Chendur PandianResult: False
