நாகர்கோவில் அருகில் உள்ள கல்குளம் என்ற கிராம மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

புதிய தலைமுறை வௌியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் - கிராம மக்கள். நாகர்கோயிலுள்ள கல்குளம் பகுதிய சேர்ந்த கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று தேசியக்கொடி மீது சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துள்ளனர். பாஜக விற்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை கருத்தானாந்த சுவாமிகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Archive

உண்மை அறிவோம்:

கிராம சபை கூட்டம் என்பது அரசியல் நிகழ்வு அல்ல… எனவே, ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராமசபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்க வாய்ப்பு இல்லை. உண்மை இப்படி இருக்க, பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கல்குளம் என்ற கிராம மக்கள் முடிவு செய்ததாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி எந்த ஒரு செய்தியும் வெளியானதாகத் தெரியவில்லை. எனவே, இந்த நியூஸ் கார்டு தொடர்பாக ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டு புதிய தலைமுறை வெளியிட்டது போல இருந்தாலும், அதன் தமிழ் ஃபாண்ட், பின்னணி டிசைன் போன்றவற்றில் வேறுபாட்டைக் காண முடிந்தது. "நாகர்கோவிலில் உள்ள" என்பதற்கு பதில் "நாகர்கோவிலுள்ள" என்றும் "பகுதியை" என்பதற்கு பதில் "பகுதிய" என்று பிழையாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன.

ஆதாரங்கள் அடிப்படையில் இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் இப்படி ஏதேனும் நிகழ்வு நடந்ததா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அடுத்ததாக இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை.

எனவே, புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகியிடம் இந்த நியூஸ் கார்டு பற்றி வாட்ஸ்ஆப் மூலமாகக் கேட்டோம். அவர், "இது போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை" என்றார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக-வுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் உறுதிமொழி எடுத்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False