
தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டி.ஐ.ஜி என்று குறிப்பிடுவதற்கு பதில் டி.ஜி.பி என்று மாற்றி குறிப்பிட்டது தெரியாமல் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
தகவலின் விவரம்:

மதுரை ஒலி என்ற ஊடகத்தின் பெயரில் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழக முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தி ராஜேஸ்வரி, தமிழக டிஜிபியாக பதவியேற்றுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
டீக்கடை பெஞ்ச் – Tea Kadai Bench என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Sai Sakthi என்பவர் 2020 ஜூலை 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இதை ஆயிரக் கணக்கானோர் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரெண்டாக இருந்து வந்த ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்பு டி.ஐ.ஜி (டெபுட்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல்) – ஆக பதவி உயர்வு பெற்றார். தமிழக முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் பேத்தி என்பதால் அவர் மீது மீடியா, சமூக ஊடக வெளிச்சம் கொஞ்சம் உள்ளது. அவர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றதை டி.ஜி.பி (டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ்) ஆக பதவி உயர்வு பெற்றதாக வெளியிட்டுள்ளனர். அதாவது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ஆக பதவி ஏற்றார் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
எஸ்.பி அந்தஸ்திலிருந்து பதவி உயர்வு பெற்றவர் நேராக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் தலைமை இயக்குநர் பதவிக்கு வர முடியும் என்ற கேள்வி எழுந்தது. டி.ஐ.ஜி-க்கும் டி.ஜி.பி-க்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் எழுத்து குழப்பம் காரணமாக இந்த பதிவிட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இருப்பினும் தமிழக அரசு வெளியிட்ட பதவி உயர்வு அரசாணையைத் தேடி எடுத்தோம். அதில், சி.ஐ.டி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் கண்காணிப்பாளராக இருக்கும் திருமதி எஸ்.ராஜேஸ்வரி ஐ.பி.எஸ், டெபுட்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆக பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை ஆயுதப்படை டி.ஜ.ஜி-யாக இடமாற்றம் செய்யப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
டி.ஜ.ஜிக்குப் பிறகு அவர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி)-ஆக பதவி உயர்வு பெற வேண்டும். அதன்பிறகு அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆக வேண்டும். கடைசியில்தான் டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (டி.ஐ.ஜி) ஆக முடியும். தமிழகத்தில் தற்போதைய டி.ஐ.ஜி-யாக திரிபாதி உள்ளார்.
டி.ஐ.ஜி-க்கும் டி.ஜி.பி-க்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் தவறாக இந்த நியூஸ் கார்டு தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. ராஜேஷ்வரி ஐ.பி.எஸ் டி.ஜி.பி-யாக இல்லை, டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றுள்ளார் என்பதை உண்மை. அப்படி இருக்கும்போது ராஜேஷ்வரி டி.ஐ.ஜி-யாக பொறுப்பேற்றார் என்று பகிர்வது தவறான குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ராஜேஸ்வரி ஐ.பி.எஸ் தற்போது டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தவறுதலாக டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெற்றார் என்று பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:தமிழக டி.ஜி.பி-யாக ராஜேஸ்வரி நியமனமா?– எழுத்துப் பிழையால் வந்த பிரச்னை
Fact Check By: Chendur PandianResult: Partly False
