இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நியூஸ் கார்டில் 2019 ஜூலை 16 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன், "இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் ஷர்மா நியமிப்பு. ஒரு நாள் மற்றும் 20 ஓவர் அணிகளுக்கு ரோகித் முழுநேர கேப்டனாக நீடிப்பார் எனவும் டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக தொடர்வார் என பிசிசிஐ அறிவித்துள்ளது" என்று உள்ளது.
இந்த பதிவை Peter John Peter என்பவர் வாங்க சிரிக்கலாம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 ஜூலை 16ம் தேதி பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கோலி தொடர்கிறார். அவர் மாற்றப்பட்டார் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், புதிய தலைமுறை நியூஸ் கார்டில் ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
முதலில் அது போன்று ஏதேனும் அறிவிப்பு வெளியாகவில்லை என்பதை உறுதி செய்ய பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று பார்த்தோம். செய்திகள் பிரிவில் ராகுல் திராவிட் நியமனம், இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கு சப்போர்ட் ஸ்டாஃப் தேவை உள்ளிட்ட அறிவிப்புகள் இருந்தன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
அடுத்து புதிய தலைமுறை நியூஸ் கார்டின் பின்னணியை சரி பார்த்தோம். அதில் குறிப்பிட்ட ஜூலை 16ம் தேதி புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆய்வு செய்தோம். 16ம் தேதி கிரிக்கெட் தொடர்பாக எந்த ஒரு பிரேக்கிங் செய்தியையும் புதியதலைமுறை வெளியிடவில்லை.
அதேநேரத்தில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு என்று ஒரு பிரேக்கிங் வெளியாகி இருந்தது. அதை எடுத்து இந்த பிரேக்கிங் நியூஸ் கார்டு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிந்தது.
அதை உறுதி செய்ய, ஃபேஸ்புக் பதிவில் உள்ள நியூஸ் கார்டை ஆய்வு செய்தோம். அதில், புதிய தலைமுறை வாட்டர்மார்க் லோகோ, பின்னணி டிசைன் என எதுவும் இல்லை. எழுத்துப் பிழையுடன், ஃபாண்ட் வித்தியாசமாகவும் இருந்தது. இதன் மூலம், 16ம் தேதி புதியதலைமுறை வெளியிட்ட பிரேக்கிங் நியூஸ் கார்டை எடுத்து, ரோஹித் ஷர்மா தொடர்பான பொய்யான தகவலை வைத்து எடிட் செய்து இவர்கள் வெளியிட்டுள்ளது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
1) புதிய கேப்டன் நியமனம் தொடர்பாக பி.சி.சி.ஐ எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
2) ஜூலை 16ம் தேதி புதிய தலைமுறை கிரிக்கெட் தொடர்பாக எந்த ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டையும் வெளியிடவில்லை.
3) புதிய தலைமுறை நியூஸ் கார்டை போட்டோ மார்ஃபிங் செய்து எடிட் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமனம்?
Fact Check By: Chendur PandianResult: False