
‘’காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை உயிரோடு எரித்த தமிழக பள்ளி மாணவி‘’, என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

தினம் ஒரு தகவல் என்ற ஃபேஸ்புக் ஐடி, ஆகஸ்ட் 21, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மாலை மலர் போஸ்டர் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’எங்கே செல்கிறது தமிழகம்? கொலை நகரமாகும் தமிழகம்,’’ என்று எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட ஃபேஸ்புக் செய்தியை ஒருமுறை கவனமாகப் படித்து பார்த்தோம். அப்போது கமெண்ட் பிரிவில் ஒருவர் இது கர்நாடகாவில் நடந்திருப்பதாகக் கூறி கமெண்ட் பகிர்ந்ததை காண நேரிட்டது.

இதையடுத்து, மாலை மலர் இணையதளத்தில், 20.08.2019 அன்று எதுவும் இதுதொடர்பான செய்தி வெளியாகியுள்ளதா, என தகவல் தேடினோம். அப்போது, இதே செய்தியின் லிங்க் கிடைத்தது.

குறிப்பிட்ட செய்தியின் இணைப்பை திறந்து படித்துப் பார்த்தோம். அப்போது, 19.08.2019 அன்று இந்த செய்தியை மாலைமலர் வெளியிட்டதாகவும், ஆனால் இது கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவம் எனவும் தெரியவந்தது.
அத்துடன், குறிப்பிட்ட மாணவி 10ம் வகுப்பு படிக்கிறார் என்றும், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காதலனுடன் சேர்ந்து தனது தந்தையை கத்தியால் குத்தி தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளார் என்றும் விவரம் கிடைத்தது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதை வைத்துப் பார்க்கும்போது, முதலில் மாலை மலர் போஸ்டர் செய்தியே தவறு என தெரியவருகிறது. 10ம் வகுப்பு மாணவியை, 9ம் வகுப்பு மாணவி எனக் குறிப்பிட்டு, மாலை மலரின் நாகர்கோவில் பதிப்பு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது. மேலும், இது கர்நாடகாவில் நிகழ்ந்த சம்பவமாகும். இந்த உண்மைகள் தெரியாமல் நமது ஃபேஸ்புக் பதிவர் அதனை பகிர்ந்து, கொலை நகரமாகும் தமிழகம், எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி இந்த ஃபேஸ்புக் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை உயிரோடு எரித்த தமிழக பள்ளி மாணவி!
Fact Check By: Pankaj IyerResult: Mixture
