
‘’நடுவானில் பறக்கும்போது குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம்.
தகவலின் விவரம்:

Archived Link
Sri Lanka post box என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை கடந்த மே 27ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘’ #விமானத்தில்_அல்குர்ஆனை_ஓதினார் என்ற ஒரே காரணத்துக்க முஸ்லிம் ஒருவரை சந்தேகத்தின் பேரில் 12 மணி நேரம் பிடித்து வைத்து விசாரணை, மனிதாபிமானம் அற்ற இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை……. முஸ்லிங்கள் இனிமேல் ஸ்ரீலங்கன் விமான சேவையை நாடவேண்டாம்….. இலங்கையில் சிங்கள அரச அதிகாரிகளிடம் இனவாதம் தளைதுக்கியுள்ளது இதிலிருந்து தெளிவாகின்றது எதிர்காலத்தில் இலங்கை நாட்டின் முனேற்றம் மிகவும் பாதிக்கப்படும் இலங்கை நாட்டுக்கு வரும் உல்லாசப்பயணிகள் புஜ்ஜியம் என்ற அடிபடியில் இருக்கும் நிலையிலும் கூட இலங்கை நாட்டு அதிகாரிகள் இவாறு நடந்து கொள்வது நாட்டுக்கு நல்லது இல்லை,’’ என்று கூறியுள்ளனர். உணர்ச்சிகரமான விசயம் என்பதால் பலரும் இதனை வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இதில் கூறியுள்ளதன்படி, முதலில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்பது இலங்கை அரசுக்குச் சொந்தமான நிறுவனமான என்ற பெயரில் ஆய்வை தொடங்கினோம். 2008ம் ஆண்டு அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் இலங்கை அரசு வாங்கிவிட்டதாக, தெரியவந்தது.
இதையடுத்து, நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ளதுபோல, குரான் படித்ததற்காக, முஸ்லீம் யாரேனும் கைது செய்யப்பட்டாரா என்று ஆதாரம் தேடினோம்.

இதன்படி, நமக்கு கிடைத்த செய்தியில், மே 23ம் தேதியன்று, மெல்போர்ன் நகரில் இருந்து கொழும்பு நோக்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த முஸ்லீம் ஒருவர் நடுவானில் குரான் படித்ததாகவும், சக பயணிகளிடம் வரம்புமீறி நடந்துகொண்டதாகவும் கூறப்பட்டிருந்தது. தனது வேலையை மட்டும் பார்க்காமல், அடிக்கடி, மத ரீதியான விவாதத்தையும் அவர் சக பயணிகளுடன் செய்திருக்கிறார். அவரது நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருந்ததால், விமான பயணிகள் அளித்த புகாரின்படி, அந்த நபரை தடுப்புக் காவலில் வைத்திருந்து, கொழும்புவில் தரையிறங்கியதும் சிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க நேரிட்டதாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டதாகவும், யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குறிப்பிட்டதாகக் கூறி, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பை முழுமையாக படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

சமீபத்தில் கொழும்புவைச்சுற்றி நடைபெற்ற ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதல் சம்பவம் உலகம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட சூழலில், இலங்கை நோக்கிச் செல்லும் விமானத்தில், நடுவானில் சந்தேகப்படும்படி நடந்துகொண்டதாலேயே, குறிப்பிட்ட நபரை தடுப்புக் காவலில் 12 மணிநேரம் வைக்க நேரிட்டதாகவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுதவிர, தனது ஊழியர்களில் 12 பேர் முஸ்லீம்கள்தான் என்றும், அதே விமான பயணத்தின்போது 5 முஸ்லீம் பயணிகள் பயணித்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட நபர் சந்தேகப்படும்படி செயல்பட்டதால்தான், மற்ற முஸ்லீம் பயணிகளை விட்டுவிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிட்டதாகவும், முஸ்லீம்களை புண்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதவிர, குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், முஸ்லீம்கள் இனி ஸ்ரீலங்கன் ஏர்லைன்சை புறக்கணிக்க வேண்டும் என்றும், சிங்கள இனவாதம்தான் இதற்கு காரணம் என்றும் பதிவர் குறிப்பிட்டுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும். பாதுகாப்பிற்காக நடைபெற்ற விசயத்தை உணர்ச்சிகரமானதாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் உள்ளது.
இதன்படி பார்த்தால், குரான் படித்தமைக்காக அந்த நபர் மீது இலங்கை அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, தெரியவருகிறது. எனவே, சம்பவம் நடந்தது உண்மைதான். நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில், பாதி உண்மை, பாதி சொந்த கருத்து நிரம்பியுள்ளதென்று முடிவு செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் பாதி உண்மை, பாதி சொந்த கருத்து நிரம்பியுள்ளதாக, நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய குழப்பமான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:குரான் படித்த முஸ்லீம் ஒருவரை மனிதாபிமானம் இன்றி கைது செய்த இலங்கை அதிகாரிகள்; உண்மை அறிவோம்!
Fact Check By: Parthiban SResult: Mixture
